கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி எனக்கு மகன் பிறந்திருக்கான். எனவே, இந்த வருட நவராத்திரி எனக்கு மிகவும் ஸ்பெஷல். கடந்த கோவிட் காலத்தில் மர பொம்மைகள் செய்பவர்களை அழைத்து, எங்கள் அப்பா அம்மா, தாத்தா பாட்டி, கொள்ளு தாத்தா பாட்டி போன்றவர்களின் உருவத்தில் மர பொம்மைகளைச் செய்தோம். என் மகள் சமைரா இந்த மர பொம்மைகளை மிகுந்த அன்புடன் நவராத்திரி கொலுவில் வைத்தாள். நானும் என் மனைவி நிஷாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். நவராத்திரி என்பதே பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பண்டிகை. இந்த நாளில் பொம்மைகளின் வழியே எங்கள் முன்னோர்களைப் பார்க்கிறோம்.
எங்கள் சொந்த ஊரான புதுக்கோடு அன்னபூரணி கோயிலில் நவராத்திரி ஒன்பது நாட்களும் மதியம் மிக அற்புதமான சாப்பாடு போடுவார்கள். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருக்குமாக இருக்கும் இந்த விருந்து. சமையலில் சேர்க்கப்படும் பூசணிக்காயை நறுக்க மாட்டார்கள். தரையில் போட்டு உடைத்து, சிதறும் தூண்டுகளை வைத்து சாம்பார் வைப்பார்கள். மிக ருசியாக இருக்கும். நவராத்திரி என்றாலே ஜாதி, மதம் இல்லாமல் கொண்டாடும் இந்த நிகழ்வுதான் என் நினைவுக்கு வருகிறது. அமெரிக்கா போனபோதும் அங்கே சின்ன சின்ன பொம்மைகளை வைத்து கொலு வைத்தேன். நம் கலாசாரத்தின் அடிப்படை நோக்கமே அனைவரையும் நேசிப்பதுதான். நவராத்திரி பண்டிகை இதற்கு ஒரு பாலமாக இருக்கிறது.
ஒரு நவராத்திரி வருடத்தில் ஒவ்வொரு நாளுக்கும்
ஒரு புடவை என்ற வகையில் பரிசளித்தார் என் அம்மா. புடவையின் நிறம் நவராத்திரியின் அன்றைய நாளை நினைவுபடுத்துவதாக இருக்கும். இன்று வரை மறக்க முடியாத நவராத்திரி அது. நான் படிக்கும் காலத்தில் ஒரு நவராத்திரி நாளில் சென்னையில் அமைந்துள்ள கல்கத்தா காளி கோயிலில் எங்கள் நடன குழுவுடன் நடன நிகழ்ச்சி செய்தோம். இதுவும் மறக்க முடியாத நவராத்திரிதான். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் எங்கள் வீட்டில் மஹிசாசுரமர்தினி சுலோகம் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
நான் பாண்டிச்சேரியில் ஸ்கூல் படிக்கும்போது நிறைய பிரண்ட்ஸ் வீட்டுக்கு போவேன். அங்க நிறைய சுண்டல் தருவாங்க. இங்க சென்னை வந்த பின்பு யாரும் நவராத்திரிக்கு கூப்பிடலை. யாராவது கொஞ்சம் கூப்பிட்டு சுண்டல் தாங்களேன். என் பிரண்ட்ஸ் வீட்டில் நவராத்திரி கொலு பொம்மைகளை பார்க்கும்போது இத்தனையும் எப்படி கலெக்ட் செய்தாங்க, எப்படி பாதுகாத்து வறாங்கன்னு ஆச்சரியமா இருக்கும். எங்கள் பாண்டிசேரி மணக்குள விநாயகர் கோயிலில் வைக்கும் கொலுவை நாள் முழுக்க பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கும். "
நவராத்திரி என்றால் என் நினைவுக்கு வருவது என் பெரியப்பா A. P. நாகராஜன் அவர்கள் இயக்கி சிவாஜி அவர்கள் நடித்த ‘நவராத்திரி’ திரைப்படம்தான். சில வருடங்களுக்கு முன்பு ALS ஜெயந்தி என்பவர் வீட்டுக்கு மட்டும் ஒரு முறை நவராத்திரி விழாவின்போது சென்று இருக்கிறேன். அதன் பின்பு யார் வீட்டுக்கும் கொலுவுக்கு செல்ல முடியவில்லை. நிறைய பேர் கொலுவுக்கு கூப்பிடுகிறார்கள். இந்த வருடமாவது போக முடியுதான்னு பார்க்கணும்.
என் மகள் ஸ்கூல் படிக்கும்போது ஒரு நவராத்திரியில் திருவான்மையூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நடந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்றாள். மறக்க முடியாத நவராத்திரி அது. நவராத்திரி என்பது பொம்மை செய்யும் கை வினை கலைஞர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு வாய்ப்பாக பார்க்கிறேன். நான் நவராத்திரிக்கு கொலு வைப்பதில்லை. ஆனால், பொம்மை செய்யும் கலைஞர்களிடம் பொம்மைகள் வாங்கி பரிசளிக்கிறேன்
என் அம்மா உயிருடன் இருந்தவரை மிகப்பெரிய அளவில் கொலு வைப்பார்கள். அம்மா காலத்துக்கு பிறகு என்னால் கொலு வைக்க இயலவில்லை. நவராத்திரியின்போது பல வீடுகளுக்கு செல்லும்போதும் என் அம்மா வைத்த கொலுதான் நினைவுக்கு வரும். ‘கடவுளே எனக்கு மீண்டும் கொலு வைக்கும் ஆசியை வழங்கு’ என்று கடவுளை பிராத்திக்கிறேன்.
நான் சில வருடங்களுக்கு முன்பு குஜராத் மக்கள் நடத்தும் நவராத்திரி தொடர்பான விழாவிற்கு சென்று இருந்தேன். பெண்கள் தாண்டியா நடனம் ஆடினார்கள். மிக சிறப்பாக இருந்தது. நமது கலாச்சாரத்தை சொல்லும் இது போன்ற நிகழ்வுகள் ஒன்பது நாட்கள் மட்டுமல்ல முப்பது நாட்களும் நடத்தப்பட வேண்டும் என்பது என் வேண்டுகோள். திருச்சியில் நான் இருந்த போது என் வீட்டில் கொலு வைக்க மாட்டார்கள். கொலு வைக்கும் என் நண்பர்கள் வீட்டுக்கு சென்று சுண்டல் சாப்பிட்டு வந்து விடுவேன்.
நான் வளர்ந்தது தர்மபுரி பகுதியில் உள்ள அக்ரஹாரம். அக்ரஹாரம் என்பதால் எல்லோர் வீட்டிலும் கொலு வைப்பார்கள். தெருவெங்கும் விழாக்கோலம்தான். தாழம்பூ வைத்து அலங்காரம் செய்த பெண்களை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். எல்லோர் வீட்டிலும் பட்சணம் செய்வார்கள். நாங்கள் ஒவ்வொரு வீட்டிற்கு சென்று கொலு பட்சணம் என்று கேட்டவுடன் தட்டு நிறைய தருவார்கள். இதுவே எங்கள் இரவு உணவிற்கு போதுமானதாக இருக்கும். அது ஒரு வசந்த காலம். சென்னை வந்த பிறகு இதெற்கெல்லாம் நேரம் இல்லை. கொலுவுக்கு அழைத்தாலும் யார் வீட்டிற்கும் செல்ல முடிவதில்லை. அக்ராஹார நாட்கள் இனி வருமா என்று ஏங்குகிறேன்.