நவராத்திரியும் நவ ஆலமும்!
ஒவ்வொரு நாளும் நவராத்திரி திருவிழா கொண்டாடி முடிந்த பின்னர், குழுவிற்கு ஒவ்வொரு வகையான ஆலம் எடுத்துவிட்டு படுக்கச் செல்லலாம்.
பூ ஆலம்: ஒரு தட்டில் மைதா பசை தடவி, அதில் அழகிய பூவிதழ்களை கோலம் போல் அமைத்து, நடுவில் ஒரு அகல் விளக்கு வைத்து தீபம் ஏற்றி ஆலம் எடுக்கலாம்.
முத்து ஆலம்: மைதா பசை தடவிய தட்டில் வறுத்த பெரிய ஜவ்வரிசியை கோலம் போன்ற டிசைனில் ஒட்டவைத்து, நடுவில் தீபம் ஏற்றி ஆலம் எடுக்கலாம்.
தீப ஆலம்: மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து, அதில் பூ விதைகளைத் தூவி நடுவில் தீபம் ஏற்றி ஆலம் எடுக்கலாம்.
முக்கூட்டு ஆலம்: மஞ்சள், பன்னீர், சந்தனம் இவை மூன்றும் கலந்து நடுவில் தீபம் ஏற்றி ஆலம் எடுக்கலாம்.
நவதானிய ஆலம்: நவதானியங்களை கோலம் போல் மைதா பசை தடவிய தட்டில் டிசைன் அமைத்து நடுவில் தீபம் ஏற்றி ஆலம் எடுக்க வேண்டும்.
ஃபெங்சுயி ஆலம்: தட்டில் கலர் கோலி குண்டுகளால் டிசைன் அமைத்து நடுவில் தீபம் ஏற்றி ஆலம் எடுக்கலாம். கோலி குண்டுகள் ஃபெங்சுயிபடி மிகவும் நல்லதாம்.
மதுர ஆலம்: சர்க்கரையும் கல்கண்டும் வைத்து நடுவில் விளக்கு ஏற்றி ஆலம் எடுக்கலாம்.
அட்சதை ஆலம்: அட்சதையில் மஞ்சள், குங்குமம் கலந்து இரு நிறங்களில் டிசைன் அமைத்து நடுவில் தீபம் ஏற்றி ஆலம் எடுக்கலாம்.
ஐவகை பருப்பு ஆலம்: துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப் பருப்பு, கேசரி பருப்பு இந்த ஐந்து வகை பருப்புகளை ஒரு தட்டில் டிசைன் அமைத்து நடுவில் தீபம் ஏற்றி ஆலம் எடுக்கலாம்.
இந்த ஒன்பது நாட்களிலும் எடுக்கப்படும் ஆலங்களில் மீண்டும் உபயோகப்படுத்தக் கூடியவற்றை எடுத்து வைத்துக்கொள்ளலாம். மீண்டும் உபயோகிக்க முடியாதவற்றை வாடிய பூக்களோடு சேர்த்து போட்டுவிடலாம்.
பின்குறிப்பு: மனிதர்களுக்கு எடுக்கப்படும் ஆலம் மட்டுமே வாசலில் கோலத்தின் மீது கொட்டப்படும். தெய்வங்களுக்கு எடுக்கப்படும் ஆலத்தை எக்காரணம் கொண்டு வாசல் தரையில் கொட்டவே கூடாது.