அங்காளம்மன் கோயில் அரிய தகவல்கள்!

அங்காளம்மன் கோயில் அரிய தகவல்கள்!

தியில் ஐந்து தலை கொண்ட பிரம்மனின் ஐந்தாம் சிரசை சிவபெருமான் கொய்ததால் ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டது. என்ன முயற்சி செய்தும் கையை விட்டு அது அகலாததுடன், சிவனுக்கு இடப்படும் உணவு அனைத்தையும் அத்தலையே உண்டு வந்தது.

மஹாவிஷ்ணுவின் அறிவுரைப்படி பார்வதி தேவி, மூன்று கவளம் அன்னத்தை எடுத்து, இரண்டு கவளத்தை சிவன் கையில் இட, பிரம்ம கபாலமே அதை வழக்கம் போல் உண்டு விடுகிறது. மூன்றாம் கவளத்தை தவறுதலாக போடுவது போல் மண்ணில் போட்டுவிடுகிறாள் பார்வதி தேவி. உணவின் ருசியில் மயங்கிய கபாலம், மண்ணை நோக்கிப் பாய, விஸ்வரூபம் எடுத்த அங்காளம்மன் அந்தக் கபாலத்தைக் தனது காலால் மிதித்து அடக்கி விடுகிறாள். அதன் பின்னர் கோபம் தணிந்து, தனது சுய ரூபம் கொண்டு அங்காள பரமேஸ்வரியாக மேல்மலையனூரில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதாக வரலாறு.

அங்காளம்மன் மகா மண்டபத்தில் புற்று வடிவிலும், மூலஸ்தானத்தில் திருவுருவத்துடனும் காட்சி அளிக்கிறாள். ஒவ்வொரு அமாவாசையன்றும் அங்காள பரமேஸ்வரிக்கு ஊஞ்சல் விழா நடத்தப்படுகிறது. இதனைக் காண லட்சோப லட்சம் பக்தர்கள் இக்கோயிலில் குவிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோயில் குறித்த இன்னும் சில சுவாரசியத் தகவல்கள்…

*ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் அமைந்திருந்தாலும், மேல்மலையனூர் ஆலயமே அம்மனுக்குத் தலைமை ஆலயமாகும்.

*சுயம்பு ரூபமான மூலவர் புற்று மண்ணால் உருவானவள். நான்கு திருக்கரங்களுடன் அருளும் அங்காளம்மன், வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள். நான்கு காரங்களில் முறையே உடுக்கை, சூலம், கிண்ணம், கத்தி ஆகியவை உள்ளன. தலைக்குப் பின்புறம் தீப்பிழம்பு காட்சி தருகிறது.

*ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்ட கோலத்தில் அருளும் அம்மனின் பாதத்துக்கு அடியில் கபாலம் காட்சி தருகிறது.

*கோயிலுக்கு நான்கு நுழைவு வாயில்கள் இருந்தாலும், பக்தர்கள் வடக்கு நுழை வாயிலையே பிரதானமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

*அளவில் மிகப்பெரியதாகக் காட்சி தரும் இக்கோயில் புற்றில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்காளம்மன் அமர்ந்ததாக நம்பப்படுகிறது.

*இந்தக் கோயிலில் இரு கால பூஜை நடைபெறுகிறது. அப்படி நடைபெறும்போது அவ்வப்போது இப்புற்றில் அம்மன் வடிவமான நாகத்தைப் பார்த்ததாக பலரால் சொல்லப்படுகிறது.

*பூஜையின்போது சக்தி வாய்ந்த இந்தப் புற்று மண்னை தண்ணீரில் கலந்து பக்தர்களுக்குக் கொடுக்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பூஜையில் கலந்துக் கொண்டு இந்த நீரை அருந்தினால், விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

*திருக்கோயிலின் தெற்கில் மல்லாந்து படுத்த கோலத்தில் பெரிய உருவில் பெரியாயி அம்மன் அருள்புரிகிறாள். தீய சக்தியால் பாதிப்புற்றவர்கள் இந்த அம்மனை வழிபட, அவை விலகுவதுடன், வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

*அமாவாசை நாட்களில் இந்த ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். பௌர்ணமி தினங்களில் ஆலயம் இருபத்தி நான்கு மணி நேரமும் திறந்திருக்கும். மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கும் இந்தக் கோயிலில் அருளும் அங்காளம்மனை குலதெய்வமாகக் கொண்டோர் பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபடுகின்றனர்.

*வேண்டுதல் நிறையவேறிய பக்தர்கள், கோயில் பிராகாரத்தில் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வடக்கு வாசலில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் சுற்றி விடுகின்றனர்.

*மாசி மாதம் மயானக் கொள்ளை திருவிழா இத்தலத்தில் பெரிய அளவில் நடைபெறும். அச்சமயம் பக்தர்கள் தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அம்மனுக்கு அர்ப்பணிக்கின்றார்கள். இதனால் ஏவல், பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகள் விலகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

*ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின்போது புதிய தேரில் அன்னையை அமர வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வது இக்கோயிலின் சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com