நடிகர் கூல் சுரேஷ், பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பியோட முயற்சித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பல விஷயங்கள் இதுவரை இல்லாத ஒன்றாக அமைந்துள்ளது. அப்படி ஒன்று தான் ஸ்மால் பாஸ் வீடு.
மேலும் வைல்டு கார்டு எண்ட்ரி என்பது எப்போதும் நடைபெறுவது தான். ஆனால் இந்த சீசனில் ஏற்கனவே ஒரு வைல்டு கார்டு எண்ட்ரி நடைபெற்ற நிலையில், 7வது சீசனில் வெளியே சென்ற 2 பேரை மீண்டும் உள்ளே அழைத்து வந்தனர். அதாவது பூகம்பம் என்ற டாஸ்க் மூலம் விஜய் வர்மாவும், அனன்யாவும் உள்ளே சென்றனர்.
இதனால் பிக்பாஸில் ஆட்டம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் அவரை வெளியே அனுப்பி விட வேண்டும் என்கிற முயற்சியில் நடிகை விசித்ரா அவரை நாமினேட் செய்தார். தனது சோகக் கதையை சொல்லுங்க எனக் கேட்டுவிட்டு மறுநாள் அவருக்கே நாமினேஷன் வேட்டு வைத்து விட்டார். இதனால் கடுப்பான கூல் சுரேஷ், பிக் பாஸ் வீட்டில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலேயே இருக்க உனக்கு தகுதி இல்லை என விசித்ராவை விளாசி எடுத்துவிட்டார்.
அந்த வாக்குவாதத்தில் கூல் சுரேஷ் சரியான கணவர் இல்லை என்கிற வாதத்தை விசித்ரா வைத்த நிலையில் கடுப்பான கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற முதல் சீசனில் நாடோடிகள் பரணி செய்ததைப் போல பிக் பாஸ் வீட்டின் சுவர் ஏறி தப்பிக்க முயன்றார்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் சுவர் ஏற முடியாததால் காப்பாற்ற வந்த மணியின் உதவியுடன் கீழே இறங்கினார்.
இதற்கு முன்னதாக பவா செல்லதுரை உடல்நிலையை காரணம் காட்டி பாதியிலேயே வெளியேறினார். தொடர்ந்து கூல் சுரேஷ் சுவர் ஏறி தப்பிக்க முயற்சித்ததால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த பிக்பாஸ், கூல் சுரேஷை கன்பெக்ஷன் ரூமிற்கு அழைத்து கொஞ்சம் பொறுமையாக இருங்க, இதனால் உங்களுக்கு தான் பிரச்சனை என விளக்கி அவரை சமாதானம் செய்து உள்ளே அனுப்பி வைத்தார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன் இதே போன்று முதல் சீசனில் நாடோடிகள் நடிகர் பரணி சுவர் ஏறி தப்பிக்க முயற்சித்தார்.
தற்போது இது மாதிரியான சம்பவம் மீண்டும் நடந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.