அதிர்ச்சிக்கு ஒரு க்ளோசப்.. அழுகைக்கு ஒரு மியூசிக்! சின்னத்திரை சீரியல்களின் அலப்பறைகள்..!

Siragadikka aasai serial
Siragadikka aasai serial
Updated on

சின்னத்திரை சீரியல்கள் என்றாலே முடிவில்லாத திருப்பங்கள், லாஜிக் இல்லாத காட்சிகள் மற்றும் பல ஆண்டுகளாகத் தொடரும் ஒரே கதைக்களம் ஆகியவை ரசிகர்களின் மத்தியில் எரிச்சலை தான் உண்டாக்குகின்றன.

கதாநாயகிகள் தூங்கி எழும்போதும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பொழுதும் பளபளப்பான லிஸ்ட் மற்றும் ஹெவி மேக்கப்புடன் காட்சி தருவது வேடிக்கையாக உள்ளது. சில சமயம் எரிச்சலைக் கூட கிளப்புகிறது. அதுவும் சீரியல்களில் இந்த வில்லிகள் படுத்தும்பாடு தாங்க முடியாது. கதாநாயகியை வீட்டை விட்டு துரத்த, குடைச்சல் கொடுக்க தினம் தினம் புதிது புதிதாக திட்டங்கள் தீட்டுவதும், அந்த திட்டங்களும் ஒவ்வொரு முறையும் கதாநாயகியாலேயே முறியடிக்கப்படுவதும் என ஓவராக இருக்கிறது.

ஏதேனும் ஒரு அதிர்ச்சியான செய்தி அல்லது சந்தோஷமான செய்தியை சொல்லிவிட்டால் போதும், வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரின் முகத்தையும் ஸ்லோ மோஷனில் கேமரா முன்பு ஷாக்கிங், சந்தோஷம் என ரியாக்க்ஷன்களை ஒவ்வொருவராக கொடுப்பது கொடுமையோ கொடுமை. ஒரு சின்ன சஸ்பென்ஸ் அல்லது அதிர்ச்சிக்கு கூட கேமராக்கள் மாறி மாறி கதாநாயகியின் முகத்தை வெவ்வேறு கோணங்களில் மிக அருகில் காட்டி, அதற்கு மியூசிக் போடுவதும் அப்பப்பா தாங்க முடியவில்லையடா சாமி!

மிகைப்படுத்தப்பட்ட வசனங்களும், மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளும், தேவையில்லாமல் முகங்களை க்ளோசப்பில் அடிக்கடி காட்டி பயமுறுத்துவதும், லாஜிக் ஓட்டைகள் நிறைந்ததுமான சீரியல்கள் நம் பொறுமையை நிறையவே சோதிக்கின்றன.

சின்னத்திரை சீரியல்களில் கையாளப்படும் அதிநவீன சதி வேலைகள் கற்பனைக்கும் எட்டாத அளவில் உள்ளன. சீரியலை நகர்த்த, விறுவிறுப்பை கூட்ட கோவில்களும் பரிகாரங்களும் உதவுவதுடன், பிளாக் மேஜிக் எனப்படும் மந்திர தந்திரங்களும், ஜோதிட காட்சிகளும் அதிகம் இடம்பெறுகின்றன. இவை கதையின் திருப்பங்களை தீர்மானிக்கும் சக்தியாகவும், பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக ஈர்க்கும் உத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இதெல்லாம் விட கொடுமை மருமகள் எவ்வளவு நல்லவளாக இருந்தாலும் மாமியார் அவரை ஒரு கட்டம் வரை நம்பவே மாட்டார். ஆனால் அதே சமயம் வில்லி செய்யும் சதியை கடைசிவரை இந்த மாமியார்களால் கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விடுகிறது.

சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் சில சமயம் நம்முள் ஊறிப் போய் விடுவார்கள். ஆனால் டைரக்டருக்கு என்ன கோபமோ அல்லது அந்த கதாநாயகிக்கு என்ன நெருக்கடியோ திடீரென ஆட்களையே மாற்றி 'இவருக்கு பதில் இவர்' என்று கார்டு போட்டு நம்மை அந்த சீரியலில் ஒன்ற விடாமல் தடுத்து விடுவார்கள்.

கால் தடுக்கி சுளுக்கு ஏற்பட்டால் நமக்கு அந்த வலி போக 4 நாட்கள் ஆகும். ஆனால் துப்பாக்கி சூடு, கத்திக்குத்து, மாடிப்படிகளில் தள்ளி விடுதல் போன்ற விபத்துக்கள் நடந்தால் கதாநாயகிகள் உடனே பிழைத்து எழுந்து அடுத்த வேலையைப் பார்க்க போய் விடுவார்கள். அதிலும் வில்லன்கள் அடுத்த கொடூரமான செயல்களுக்கு தயாராகி விடுவார்கள்.

சிந்துபாத் கதை போல் பல வருடங்களாக இழுத்தடிக்கப்படும் கதைகள் நம் பொறுமையை வெகுவாகவே சோதிக்கின்றன. சின்னத்திரை சீரியல்கள் இல்லத்தரசிகளின் பொழுதுபோக்காக இருந்தாலும், குடும்ப உறவுகளில் விரிசல், நேர விரயம் மற்றும் கற்பனையான சண்டைக் காட்சிகளால் மன அழுத்தம் போன்ற பல இன்னல்கள் ஏற்படத்தான் செய்கின்றன. பெரும்பாலான சீரியல்கள் கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் சதி, மாமியார் மருமகள் மோதல், முக்கியமாக பழிவாங்கும் உணர்ச்சி ஆகியவற்றை மட்டுமே மையமாக வைத்து நகர்த்தப்படுகிறது. இவை தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை மக்களிடம் விதைக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஒரு நெயில் பாலிஷின் விலை ரூ.1.6 கோடியா? அப்படி என்னதான் இருக்கு அதுல?
Siragadikka aasai serial
logo
Kalki Online
kalkionline.com