

முன்பெல்லாம் திரையரங்குகளில் பெரிய திரையில் வெளியாகும் படங்களுக்கே மவுசு இருந்தது. ஆனால் தற்போது வீட்டில் இருக்கும் சின்னத்திரை மூலம் சிறு சிறு நாடகம் போன்ற வெப் சீரிஸ் படங்களுக்கே ரசிகர்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.
அவ்வகையில் தற்போது ஓடிடி (OTT) தளங்களில் தமிழ் மொழியில் வெளியாகி மிகவும் பிரபலமான 2 வெப் சீரிஸ்கள் பற்றி இங்கு காண்போம்.
லிங்கம் (Lingam) :
தமிழ் க்ரைம் மற்றும் த்ரில்லர் வெப் சீரிஸான லிங்கம் சென்ற மாத இறுதியில் (ஜூன் 26, 2026 ) அதிகாரப்பூர்வமாக வெளியானது . தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் (JioHotstar ) காணக் கிடைக்கிறது.விறுவிறுப்பான சஸ்பென்ஸ் மற்றும் உணர்வு பூர்வமான காட்சிகள் நிறைந்த தொடர்.ஒரு காவல் அதிகாரியின் மரணத்தை மையமாக வைத்து நகரும் சிக்கலான விசாரணை கதையாகும் .
இந்த வெப் சீரிஸ் 1987–1996 காலகட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் சில உண்மைச் சம்பவங்களைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தம் 8 எபிசோடுகள் உள்ள இதில் நடிகர் கதிர் நாயகனாக நடித்துள்ளார். திறமையான கபடி வீரராக இருக்கும் இளைஞரான லிங்கம் என்பவர் தான் செய்யாத ஒரு குற்றத்தில் சிக்கவைக்கப்படுகிறார்.அந்த ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. சட்டத்தின் மீதான நம்பிக்கையை இழந்த அவர்,சூழ்நிலையால் குற்ற உலகிற்குள் தள்ளப்படுகிறார்.அதன் பின்னர் நடக்கும் மிரட்டலான சம்பவங்களே கதை.
ஒரு சாதாரண விளையாட்டு வீரர் சூழ்நிலை காரணமாக எப்படி அச்சுறுத்தலான ரவுடியாக மாறுகிறார்,அதற்குப் பின்னால் இருக்கும் துரோகம்,பழிவாங்குதல், அதிகாரப் போட்டி,குடும்ப உறவுகள் மற்றும் மனித மனதின் இருண்ட பக்கங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இத்தொடர் நகர்கிறது.
கதிர் மற்றும் திவ்யா பாரதி நடித்துள்ள எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த கேங்ஸ்டர் நாடகம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
கதையின் ஆரம்பத்திலிருந்தே சஸ்பென்ஸை தக்கவைத்து,அடுத்ததாக என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதும்,கதிர்,திவ்யா போன்ற முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பு இயல்பாகவும்,உணர்வுபூர்வமாகவும் உள்ளதும் தொடருக்கு சுவாரஸ்யம் தருகிறது.ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை பார்ப்பவர்களுக்கு த்ரில்லர் அனுபவத்தை அதிகரிக்கின்றன.குறிப்பாக கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வைக்கப்பட்டுள்ள எதிர்பாராத திருப்பங்கள் தொடரை தொடர்ந்து பார்க்கத் தூண்டுகின்றன.இவையெல்லாம் பாஸிடிவ் என்றால் சில எபிசோடுகளில் கதை நகரும் வேகம் சற்று மெதுவாக செல்வது போல் தோன்றுவது சலிப்பூட்டும் என்பது மைனஸ். அதேபோல் துணைக் கதாபாத்திரங்களுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படாததும் சில திருப்பங்களை முன்கூட்டியே கணிக்க முடிவதும் இறுதிப்பகுதியில் சஸ்பென்ஸைக் குறைத்து விடுகிறது.
மொத்தத்தில் லிங்கம் ஒரு முறை பார்க்க தகுந்த தமிழ் த்ரில்லர் வெப் சீரிஸாக விறுவிறுப்பான குற்றக் கதைகளையும், சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதையையும் விரும்புபவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும் என்கின்றனர் விமர்சகர்கள்.
ஹார்ட் பீட் (Heart Beat)
ஹார்ட் பீட் (Heart Beat) ஒரு தமிழ் மருத்துவம் மற்றும் காதலை மையப் படுத்திய வெப் சீரிஸ்.இது 2024 மார்ச் 8 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தில் வெளியானது.தற்போது 2 சீசன்கள் வெளியாகி ரசிகர்களால் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் 3வது சீசன் 2026 ஜூலை 30 அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை பின்னணியில் நடக்கும் காதல், நட்பு மற்றும் மருத்துவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களைச் சொல்லும் ஒரு தொடராக பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது இத்தொடர்.
சென்னை 'ஆர்.கே மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையை (RK Multispeciality Hospital) மையமாகக் கொண்டு கதை நகர்வது சிறப்பு.மருத்துவக் கல்லூரியை முடித்த டாக்டர் ரீனா,சென்னையில் உள்ள ஆர்.கே.மருத்துவமனையில் ரெசிடென்ட் மருத்துவராகப் பணியில் சேர்கிறார்.மருத்துவமனையில் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் சவால்கள், மூத்த மருத்துவர்களின் வழிகாட்டுதல், இளம் மருத்துவர்களின் நட்பு மற்றும் போட்டி ஆகியவற்றை எதிர்கொள்ளும் ரீனாவின் குடும்ப வாழ்க்கை, காதல், மற்றும் கடந்தகால ரகசியங்கள் கதையை உணர்வுபூர்வமாக முன்னெடுத்துச் செல்ல உதவுகிறது.
மருத்துவமனையின் பரபரப்பு தருகிறது அவசர கால சூழ்நிலைகள், மனித உறவுகள் மற்றும் மருத்துவர்களின் தனிப்பட்ட போராட்டங்களே இந்தத் தொடரின் முக்கிய அம்சங்களானாலும் மருத்துவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் மருத்துவ சவால்கள், தொழில்முறை அழுத்தங்கள் பார்வையாளர்களை எளிதாக கவர்கிறது.
இரு விதமான பெண்கள் இக்கதையின் நாயகிகாக முக்கியத்துவம் பெறுகின்றனர்.மருத்துவ பணியில் அர்பணிப்புடன் தீவிரமாக உழைத்து கண்டிப்பான மூத்த மருத்துவராக ரதி (அனுமோல்)மற்றும் மருத்துவர் ரீனா (தீபா பாலு)ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி கதை சுழல்கிறது.மருத்துவர்களின் மருத்துவ அவசர கால சவால்கள்,அவர்களின் தீவிரமான தொழில் வாழ்க்கை, குறுக்கிடும் குடும்பப் பொறுப்புகள் மற்றும் காதல் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் விதமாக கதை அமைக்கப்பட்டுள்ளது.
முதல் சீசன் 2024-ல் வெளியாகி வெற்றிகரமாகத் தனது அடுத்தடுத்த சீசன்களை எட்டியுள்ளது இத்தொடர்.கதை மருத்துவம் சார்ந்தது எனினும் மருத்துவமனையின் பரபரப்பான சூழ்நிலையிலும்,நகைச்சுவை,காதல் மற்றும் கதாபாத்திரங்களின் மர்மமான ரகசியங்கள் என அனைத்தையும் கலந்து குடும்பத்தினருடன் ரசிக்கும்படி இக்கதை உருவாக்கப்பட்டுள்ளதே இதன் வெற்றிக்கு காரணம் என்கின்றனர்.
அனுமோள்,கார்த்திக் குமார்,தீபா பாலு மற்றும் சாருகேஷ் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர்.மேலும் தீபா பாலு விலகுவார் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அவர் இந்த சீசனிலும் தொடர்கிறார் என்பது சிறப்புத் தகவல்.முந்தைய சீசனில் ரீனா (Reena) சந்திக்கும் விபத்து மற்றும் கோமா நிலை, அதைத் தொடர்ந்து அவரது வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்கள் மற்றும் மருத்துவர்களின் மருத்துவமனை சவால்கள் புதிய சீசனில் விவரிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக ரீனா தனது பணியிடத்தை ஆர்.கே.மருத்துவமனையில் இருந்து ஏ.எம்.மருத்துவமனைக்கு (AM Hospital) மாற்றும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
உங்கள் ப்ரீ டைமில் பார்த்து மகிழ இந்த 2 தொடர்களும் சூப்பர்.