இயக்குனர் இமயம் பாரதிராஜா முதன் முதலில் இயக்கிய சின்னத்திரை சீரியல் எது தெரியுமா..?

Director Bharathiraja
Director Bharathiraja
Updated on

இயக்குனர் இமயம் பாரதிராஜா முதன் முதலில் இயக்கிய சின்னத்திரை சீரியல் 'தெக்கத்தி பொண்ணு'. அதைத் தொடர்ந்து 'அப்பனும் ஆதலும்' மற்றும் 'முதல் மரியாதை' ஆகிய தொடர்களையும் அவர் இயக்கியுள்ளார்.

தெக்கத்தி பொண்ணு:

'தெக்கத்தி பொண்ணு' தொடரின் மூலம்தான் இயக்குனர் பாரதிராஜா சின்னத்திரையில் அறிமுகமானார். கலைஞர் தொலைக்காட்சியில் ஏப்ரல் 14, 2008ஆம் ஆண்டு ஒளிபரப்ப தொடங்கப்பட்டு, 750 க்கும் மேற்பட்ட எபிசோடுகளைக் கடந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற கிராமியத் தொடர் இது. கிராமப்புற பின்னணியை மையமாகக் கொண்டு முழுக்க முழுக்க தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது.

கிராமப்புறங்களில் நிலவும் பழக்கவழக்கங்கள், ஜாதிய பின்னணிகள் மற்றும் அங்கு வாழும் மக்களின் பாரம்பரிய உறவு முறைகளை இத்தொடர் தத்ரூபமாக காட்சிப்படுத்தியது. குடும்பம் மற்றும் உறவுகளில் கிராமத்துப் பெண்கள் எவ்வாறு ஆண்களுக்கு இணையாக பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை ஆழமாக வலியுறுத்தியது.

Thekkathi Ponnu
Thekkathi PonnuSource:IMDB

அப்பனும் ஆதலும்:

தெக்கத்தி பொண்ணு தொடருக்குப் பிறகு அவர் இயக்கிய மற்றொரு புகழ்பெற்ற தொடர் இது. இதில் பாரதிராஜா தனது 'எண்ணீர் தோழன்' திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகப்படுத்திய ரமா, இந்த புதிய தொடரில் 5 குழந்தைகளின் தாயாக நடித்து பட்டையை கிளப்பினார். 'அப்பனும் ஆத்தலும்' படத்தின் கதை, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் போது எதிர்கொள்ளும் சிரமங்களையும், அதற்குப் பதிலாக குழந்தைகள் வளர்ந்த பிறகு தங்கள் பெற்றோரை எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் மையமாகக் கொண்டிருக்கும். இதில் நடிகை சுகன்யாவும் மகள்களில் ஒருவராக நடித்த இந்த தொடரின் தலைப்புப் பாடலை ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, பாடல்களை நா. முத்துக்குமார் மற்றும் சினேகன் எழுதியிருந்தனர். இது அவர்கள் இருவருக்கும் முதல் தொலைக்காட்சி முயற்சியாகும்.

இவை இரண்டுமே தமிழ் மண் சார்ந்த கிராமியக் கதை அம்சத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

Appanum Athalum
Appanum Athalum

முதல் மரியாதை:

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான 'முதல் மரியாதை' சின்னத்திரை தொடரானது, புகழ்பெற்ற 'முதல் மரியாதை' திரைப்படத்தின் கதையைத் தழுவியோ அல்லது அதன் தொடர்ச்சியாகவோ அமையாமல், முற்றிலும் மாறுபட்ட கிராமிய பின்னணியிலான காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்தொடர் கிராமத்து மக்களின் யதார்த்த வாழ்க்கை, அன்பு, உறவுகளின் சிக்கல்கள் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளை மையமாகக் கொண்டு ஒளிபரப்பப்பட்டது.

பறவைக் கூட்டில் வாழும் மான்கள்:

நவீன தமிழ் சின்னத்திரை மற்றும் ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு இயக்குனர் பாரதிராஜா, அமேசான் பிரைம் ஓடிடி தளத்திற்காக 2023 ஆம் ஆண்டு வெளியான 'மாடர்ன் லவ் சென்னை' ஆந்தாலஜி தொடரில் 'பறவை கூட்டில் வாழும் மான்கள்' என்ற பகுதியை இயக்கியுள்ளார். முதிர்ச்சியான திருமண உறவுச் சிக்கல்களைப் பேசிய இத்திரைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்தது.

நகர்ப்புற காதல், திருமணத்திற்குப் புறம்பான உறவு மற்றும் மன முதிர்ச்சியை மையமாகக் கொண்ட கதைக்களம் இது. சமூகத்தில் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத உறவுச் சிக்கல்களை, மிகவும் கவித்துவமாகவும் முதிர்ச்சியுடனும் திரையில் பேசியதற்காக இப்படைப்பு பாரதிராஜாவின் பறவைக் கூட்டில் வாழும் மான்கள் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

கவித்துவமான தலைப்பில், நண்பன் பாலுமகேந்திராவுக்கு பாரதிராஜா சமர்ப்பித்திருக்கும் இப்படத்தில் முன்னவரின் தாக்கங்கள் இதில் நிறையவே உண்டு. 'மறுபடியும்' படத்தின் நட்சத்திரங்களான ரவி, ரேவதி, ரோகிணி ஆகிய பெயர்களே இப்படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள். இன்றைய தலைமுறை இயக்குனர்களுக்கு தான் எந்த வகையிலும் குறைந்தவரில்லை என்று தனது 81 வது வயதில் மீண்டும் நிரூபித்தவர் பாரதிராஜா.

இதையும் படியுங்கள்:
இந்த வாரம் ஓடிடியில் கண்டுகளிக்க: பக்தி பரவசம் மிகுந்த கருப்பு முதல் கிரைம் திரில்லர் டிரிடம் வரை.!
Director Bharathiraja
logo
Kalki Online
kalkionline.com