
தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகராகவும், நல்ல மனிதராகவும் வாழ்ந்து காட்டியவர் நடிகர் விஜயகாந்த். சினிமா பின்புலம் இல்லாமலேயே இவர் திரைத்துறையில் முன்னணி நடிகராக உயர்ந்தார். சினிமாவின் மீதிருந்த ஆர்வமும், அதற்காக விஜயகாந்த் எடுத்துக் கொண்ட முயிற்சியும் தான் இதற்கு முக்கிய காரணம். தமிழைத் தவிர வேறு எந்த மொழிப் படங்களிலும் நடிக்காதவர் விஜயகாந்த். ஒருமுறை இவரது வேண்டுகோளை ஏற்று கேரளத்து திரைப் பிரபலம் ஒருவர் தமிழ்ப் பாடலை பாடினார். யார் அந்த பிரபலம்? எப்போது பாடினார் என்பதை இப்போது காண்போம்.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, சினிமா தான் தனக்கு எல்லாமே என சென்னைக்கு வந்தவர் தான் விஜயகாந்த். தொடக்கத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத போதிலும் கூட, முயற்சியைக் கைவிடவில்லை. விஜயகாந்தின் முயற்சிக்கு கிடைத்த பலனாக, தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும்படி உயர்ந்தார் விஜயகாந்த். தனது நலனை மட்டும் பாராமல், சினிமா கலைஞர்கள் அனைவரது நலனிலும் அக்கறை செலுத்தியவர் இவர்.
ஊமை விழிகள், அம்மன் கோயில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள், சட்டம் ஒரு இருட்டறை, ஆனஸ்ட் ராஜ், கேப்டன் பிரபாகரன், வானத்தை போல, சின்ன கவுண்டர் மற்றும் தவசி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார் விஜயகாந்த். ஒரு காலகட்டத்தில் சூப்பர்ஸ்டார் மற்றும் உலக நாயகன் ஆகிய இருவருக்கும் போட்டியாளராக மாறினார் விஜயகாந்த். படங்களில் நடிப்பது மட்டுமின்றி, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் 2000 முதல் 2006 வரை பணிபுரிந்தார். இந்த 6 ஆண்டுகள் நடிகர் சங்கத்திற்கு பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும்.
தனது திறமையான நிர்வாகத் திறனால், நடிகர் சங்கத்தை கடனிலிருந்து மீட்டெடுத்தார் விஜயகாந்த். குறைந்த ஊதியம் வாங்கும் கலைஞர்களுக்கு ஓய்வூதியம், அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு என கடைக்கோடி நடிகர்களின் நலனை சிந்தித்து செய்லபட்டார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அவ்வப்போது விழா கொண்டாட்டப்படுவது வழக்கம். அப்படி ஒருமுறை விஜயகாந்த் தலைவராக இருந்தபோது தென்னிந்திய நடிகர் சங்க விழா கொண்டாட்டது.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்த மோகன்லால், நடிகர் சங்க விழாவில் கலந்து கொண்டு தமிழ்ப் பாடல் ஒன்றைப் பாடினார். இத்தனைக்கும் மோகன்லால் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக கூட இல்லை. கேப்டன் விஜயகாந்த் அழைத்த ஒரே காரணத்திற்காக, மோகன்லால் விழாவிற்கு வருகை தந்தார். கேப்டன் மீதிருந்த மரியாதை தான் அவர் தமிழ்ப் பாடலைப் பாட ஒரே காரணம். 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ரன் திரைப்படத்தில் வரும் ‘காதல் பிசாசே காதல் பிசாசே ஏதோ சௌக்கியம் பரவாயில்லை’ என்ற பாடலை மோகன்லால் நடிகர் சங்க விழாவில் அருமையாக பாடி அசத்தினார்.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகத் திறமை கொண்ட மோகன்லால், மலையாளத்தில் வெற்றிகரமான நடிகர். இவர் முதலில் எதிர்மறையான வேடங்களில் நடித்து, பிறகு துணை நடிகராக உயர்ந்தார். ‘ராஜாவிண்டே மகன்’ என்ற திரைப்படம் தான் மோகன்லாலை முன்னணி நடிகராக மாற்றியது. அதன்பின் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார்.