
பாலா இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான 'அவன் இவன்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஜனனி ஐயர். அதனை தொடர்ந்து அசோக் செல்வனுடன் இவர் சேர்ந்து நடித்த ‘தெகிடி’ மற்றும் அதே கண்கள், பலூன் திரைப்படங்கள் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தின. இதனை தாண்டி கெளதம் மேனனின் 'விண்ணை தாண்டி வருவாயா' திரைப்படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு 3 இடம் பிடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தமிழ் மற்றும் மலையாள மொழிப்படங்களில் நடித்து வரும் நடிகை ஜனனி, படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரீஸ்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தனது நீண்ட நாள் நண்பரான விமானி சாய் ரோஷன் ஷ்யாம் உடன் நிச்சயதார்த்தம் முடித்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ரோஷன் ஷாமைப் பொறுத்தவரையில் சென்னையில் பிறந்து வளர்ந்து, துபாயில் விமானியாக செட்டில் ஆனவர். இவரும் நடிகை ஜனனியும் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் இவர்கள் காதலுக்கு இவர்களது பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதில் இரு தரப்பு உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இவர்களது திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது. ஆனால் திருமண தேதி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஜனனி-சாய் ரோஷன் ஷாம் ஜோடிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ஜனனி நிருபரிடம் கூறுகையில், "எனது தோழி மூலமாகத்தான் சாய் ரோஷன் ஷாமின் அறிமுகம் கிடைத்தது. அவர் விமான பைலட் ஆவார். சென்னையில் பிறந்த அவர் துபாயில் குடியேறி இருக்கிறார். ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கிய பழக்கம் நாளடைவில் காதலாக மாறிப்போனது. கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததின் அடிப்படையில், சென்னையில் கடல் அலை பின்னணியில் எங்களது திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடந்துள்ளது" என்று தெரிவித்தார்.