

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மிக முக்கியமான படங்களில் ஒன்றாக ’ஆளவந்தான்’ திரைப்படம் நாளை ஆயிரம் திரையரங்குகளில் வெளியாவதை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு தன்னுடைய எக்ஸ் தளத்தில் மீண்டும் இன்று உறுதிச் செய்துள்ளார்.
கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியான படம் ‘ஆளவந்தான்’. சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானுவின் வி கிரியேஷன்ஸ் தயாரித்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், ஃபாத்திமா பாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்கர் எஹெசான் லாய் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
படத்தில் கமல்ஹாசன் நாயகனாகவும், வில்லனாகவும் இரண்டு வெவ்வெறு தோற்றங்களில் நடிப்பில் மிரட்டியிருப்பார். உளவியல் சிக்கலைப்பேசும் இப்படம் கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இந்நிலையில் படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில், படத்தை உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய தாணு திட்டமிட்டிருந்தார். அதன்படி நாளை டிசம்பர் 8-ம் தேதி ‘ஆளவந்தான்’ திரைப்படம் உலகம் முழுவதும் புதுப்பொலிவுடன் திரையரங்குகளில் வெளியாகும் என தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் அறிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் கடந்து மூன்று நாட்கள் ஆகியும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், டிசம்பர் 8ம் தேதி கமல்ஹாசனின் ’ஆளவந்தான்’ மற்றும் ரஜினிகாந்தின் ’முத்து’ ஆகிய படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆளவந்தான் படம் நிச்சயமாக நாளை வெளியாகும் என்பதை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு உறுதிப்பட தெரிவித்துள்ளார். இதனால் இந்தகால 2கே இளைஞர்கள் ’ஆளவந்தான்’ படத்தை திரையரங்கில் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.