

நடிகர் பிரேம்ஜி அமரன் தனது 47 வயதில் தந்தையாகியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, சிம்பு இயக்கி, நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து சென்னை 28 படத்தில் காமெடி நகராக நடித்து பிரபலமானார். தொடர்ந்து சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல குரு, சேட்டை, நாரதன், சிம்பா என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து அசத்தியிருப்பார். பல படங்களில் நடித்திருந்தாலும் தனது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படங்களே இவருக்கு அதிக பெயர் பெற்று தந்தது.
அதாவது வெங்கட் பிரபுவின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்கள் பிரேம்ஜிக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. இதனால் தனது சகோதரர் இயக்கும் படத்தில் மட்டுமே அதிகளவு நடித்துவருகிறார்.
நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர் என பல முகங்களை சினிமாவில் காட்டி வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணங்கள் பற்றி பல வதந்திகள் தொடர்ச்சியாக பரவி வந்தன. இவர் ஒரு பெண்ணுடன் லிவ்விங்கில் வாழ்ந்து வருவதாகவும் தகவல் பரவி வந்தது. ஆனால் இதற்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு நாள் திருமணமான புகைப்படத்தை பகிர்ந்தார். இந்த திருமணத்தில் மிக நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.
பல வருடங்களாக சிங்கிளாகவே சுற்றி வந்த பிரேம்ஜி எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென திருமணம் முடிந்துவிட்டதாக அறிவித்தார். இது 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இந்த நிலையில் இந்து கர்ப்பமாக இருந்த நிலையில் நேற்று இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை 'வல்லமை' பட இயக்குநர் கருப்பையா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் பிரேம்ஜிக்கு ரசிகர்கள், திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.