தமிழ் சினிமா வரலாற்றில் டாப் வில்லன்களின் வரிசையில் யாரும் அசைக்க முடியாத சிம்மாசனத்தில் அமர்ந்தவர் தான் நடிகர் ரகுவரன். ஒரு ஹீரோவாகவும் சரி வில்லனாகவும் சரி தன்னுடைய மிகச்சிறந்த நடிப்பாலும் தனித்துவமான கதாப்பாத்திரங்களாலும் இவர் பலகோடி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்து, இன்றும் நம்முடைய நினைவில் வாழ்ந்து வருகிறார். இவருடைய வாழ்க்கை பயணமும்கூட ஒரு ரோலர் கோஸ்டர் போலவே ஏற்றங்களும் இறக்கங்களும் நிறைந்ததாகவே காணப்படுகிறது. மேலும் அவருடைய நினைவு நாளான இன்று அவருடைய வாழ்க்கைப் பயணத்தை நினைவு கூறலாம் வாங்க...
ஆரம்ப வாழ்க்கை:
நடிகர் ரகுவரன் 1958ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி வேலாயுதம் நாயர் - கஸ்தூரி எனும் தம்பதிக்கு மகனாக பிறந்துள்ளார். கேரளாவில் உள்ள ‘கொல்லங்கோடு’ தான் இவருடைய சொந்த ஊராகும். பின்னர் ரகுவரனின் தந்தை தொழில் செய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூருக்கு தனது குடும்பத்துடன் குடியேறி, கோயம்புத்தூரில் தனது பள்ளி, மற்றும் கல்லூரி படிப்பையும் முடித்தார் ரகுவரன்.
சினிமாப் பயணம்:
1982-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘காக்கா’ படத்தின் மூலம் திரைத்துறைக்கான முதல் அடியை எடுத்து வைத்தார். அதன்பிறகு அதே ஆண்டில் ‘ஏழாவது மனிதன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஒரு ஓடை நதியாகிறது, முடிவல்ல ஆரம்பம், குற்றவாளிகள், சம்சாரம் அது மின்சாரம், பூவிழி வாசலிலே உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
வில்லன் தான் பெஸ்ட்:
ஆரம்பத்தில் சில படங்களில் ஹீரோவாக நடித்த ரகுரவனுக்கு எதிர்பார்த்த அளவிலான வெற்றி கிடைக்கவில்லை. அதன்பிறகு வில்லனாக நடிக்க களமிறங்கிய இவர், ஊர்க்காவலன், மனிதன், காதலன், பாட்ஷா, முத்து, அருணாச்சலம், ரட்சகன், முதல்வன், உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக அவதாரம் எடுத்தார்.
முன்னணி நடிகர்களுடனான கூட்டணி:
நடிகர் ரகுவரன் பல முன்னனி நடிகர்களோடும் இணைந்து நடித்த அனுபவத்தை பெற்றவர். அந்த வரிசையில் ரஜினியுடன் பாட்ஷா, அர்ஜூனுடன் முதல்வன் உள்ளிட்ட பல படங்கள் ரகுவரனின் நடிப்புக்கு முக்கிய சான்றுகளாக உள்ளன. வில்லன் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் தனி முத்திரை பதித்துள்ள ரகுவரன், அஜித்துடன் முகவரி, மாதவனுடன் ரன், விஜயுடன் திருமலை மற்றும் சூர்யாவுடன் உயிரிலே கலந்தது உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.
கடைசி திரைப்படம்:
நடிகர் ரகுவரனின் கடைசி திரைப்படம் தனுஷ் ஹீரோவாக நடித்து வெளிவந்த ‘யாரடி நீ மோகினி’ தான். இப்படத்தில் தனுஷின் தந்தையாக இவருடைய நடிப்பும் கதாப்பாத்திரமும் பலரையும் கண்கலங்க வைத்தது. இதுகுறித்து நடிகர் ரகுவரனின் சகோதரர் பிரபல யூட்டியூப் செனலுக்கு அளித்தப் பேட்டியில் “இப்படத்தின் கதை ரகுவரனுக்கு பிடித்துப் போனது. கதையில் தனுஷின் கதாப்பாத்திரம் தனது மகன் ரிஷியை நினைவு படுத்தியதால் அந்த படத்தில் நடிப்பதற்கு ரகுவரன் ஒப்புக்கொண்டார். படத்தின் டப்பிங் முடித்த பின், ரகுவரன் சோகமாகவே இருந்தார். யாருடனும் பேசாமலே அமைதியாக இருந்தார். கடைசியில் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே உயிரிழந்துவிட்டார்.” என்று அவரது சகோதரர் பேட்டியில் கண்கலங்கி கூறியுள்ளார்.