சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் 12 ஏக்கரில் மருத்துவமனை ஒன்றை கட்டி அதில் ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்தின் லால் சலாம் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து அடுத்து வேட்டையன், தலைவர் 171 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வேட்டையன் பட ஷூட்டிங்கிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் சென்றுள்ளார்.
இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை திருப்போரூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கு அவர் புதிதாக வாங்கி இருக்கும் நிலத்துக்கான பத்திரப்பதிவு நடைபெற்றது. அப்போது ரஜினிகாந்த் வருவதை அறிந்து அவரைக் காண அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் அங்கு வந்தது குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் இருந்து தாழம்பூர் செல்லும் வழியில் 12 ஏக்கரில் நிலம் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். அதற்காக பத்திரப்பதிவு செய்வதற்காக தான் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் வந்துள்ளார் ரஜினி. மேலும் அந்த இடத்தில் பிரம்மாண்ட மருத்துவமனை ஒன்றை கட்டும் முடிவில் ரஜினிகாந்த் உள்ளதாகவும், அந்த மருத்துவமனையில் ஏழை எளிய மக்களுக்கு உயர்தரத்தில் இலவச சிகிச்சை அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்றும், தற்போது ரஜினிகாந்த் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால், அந்த கட்டுமான பணிகளை உடன் இருந்து கவனித்துக் கொள்ள தன் நண்பர் ஒருவரை ரஜினி நியமித்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.