2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருக்கின்றன. இந்த சூழலில் பல்வேறு தலைவர்களும் மாநிலம் தழுவிய அளவில் தேர்தல் சுற்றுப் பயணங்களை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் சட்டசபைத் தேர்தலில் சூர்யாவின் குடும்பத்தில் இருந்து ஒருவர் திமுக சார்பாக கொங்கு மண்டலத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.அதுவும் விஜய்யை எதிர்கொள்ளும் வகையில் நடிகர் சூர்யாவை திமுக களமிறக்கும் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வந்தனர். குறிப்பாக விஜய் பிரிக்கப்போகும் வாக்குகளை சமாளிப்பதற்காக திமுக தரப்பில் சூர்யாவை களமிறக்க திட்டமிட்டு வருவதாக சில செய்திகள் வெளியானது.
இதுதொடர்பாக அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
“கடந்த சில நாட்களாக அண்ணன் சூர்யா பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகிறது.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல. சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது.
கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது. சமீபத்தில் நடத்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும். எங்கள் அண்ணன் சூர்யா பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம்” என அதில் கூறப்பட்டுள்ளது.