
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் எண்ணற்ற படங்கள் வெளிவருகின்றன. இருப்பினும் தனித்துவமான கதைகளுடன், ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் படத்தை இயக்கும் இயக்குநர்கள் வெகு சிலரே. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் தான் இயக்குநர் பாலா. இவரது முதல் திரைப்படமான சேது கடந்த 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் திரைக்கு வந்தது. இப்படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கவே, தமிழ் சினிமாவிற்கு தரமான இயக்குநர் கிடைத்து விட்டார் என்ற பேச்சுகள் கோலிவுட் வட்டாரத்தில் வலம் வந்தது. இவ்வளவு பெரிய ஹிட் படத்தில், முதலில் நடிக்கவிருந்தது விக்ரம் இல்லையாம்! பல நடிகர்களுக்கு சென்ற வாய்ப்பு கடைசியில் விக்ரமுக்கு வந்து படமும் வெற்றியடைந்தது. அப்படியானால், விக்ரமுக்கு முன் யாரெல்லாம் இப்படத்தில் ஹூரோவாக நடிக்க இருந்தார்கள் என்பதைப் பார்ப்போமா!
இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக் கலையைக் கற்றுக் கொண்ட பாலா, தனது முதல் படத்திற்கான வேலையைத் தொடங்கிய போது ஏகப்பட்ட தடங்கல்கள் உண்டானது. சேது படத்தின் கதையை எழுதிய பின், படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வில் கவனம் செலுத்தினார். முதலில் இப்படத்தில் நடிக்கவிருந்தது நடிகர் அஜித்குமார் என சமீபத்தில், இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். சேது படத்தில் தல அஜித்தா! கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! ஆனால் இதுதான் உண்மை எனக் கூறியிருக்கிறார் அமீர்.
அமீர் இதுகுறித்து மேலும் கூறுகையில், “தல அஜித் இயக்குநர் பாலாவின் முதல் படத்தில் கமிட்டாகி, படத்திற்கு பூஜையும் போடப்பட்டது. ஆனால் அஜித் கமிட்டான போது படத்தின் பெயர் அகிலன் என்று இருந்தது. அதன் பிறகு பாலா மற்றும் அஜித் இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படவே படம் கைவிடப்பட்டது. அதன்பிறகு விக்ரம் ஹீரோவாக சேது என்ற பெயரில் படம் வெளியாகி மெகா ஹிட் ஆனது” என அவர் தெரிவித்தார்.
சேது படத்தில் விக்ரம் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர் நவரச நாயகன் கார்த்திக், நடிகர் விக்னேஷ் மற்றும் நடிகர் முரளி என பல நடிகர்களிடம் இப்படத்தின் கதையை பாலா சொல்லியிருக்கிறார். கார்த்திக் அதிக சம்பளம் கேட்டதால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. நடிகர் விக்னேஷ்க்கு படத்தின் கதை பிடிக்காமல் போனது. நடிகர் முரளி மற்ற படங்களில் பிஸியாக இருக்கவே, இப்படத்தில் நடிக்க நேரம் கிடைக்காமல் போனது.
தனது முதல் படத்திற்கு கதாநாயகன் தேர்வில் பல்வேறு சிரமங்களைச் சந்தித்த பாலாவுக்கு, விக்ரம் நடித்தால் நன்றாக இருக்கும் என ஆலோசனை கொடுத்ததே நடிகர் சிவகுமார் தான். அதுவரை பெரிய வெற்றியைப் பெற முடியாமல் தவித்து வந்த விக்ரமிற்கு, சேது படம் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. நடிப்பில் மிரட்டியிருந்த விக்ரம் மற்றும் நல்ல கதையம்சம் கொண்ட இயக்குநர் பாலா ஆகியோரின் காம்போவினால், படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் விகரமின் அண்ணனாக சிவகுமாரும் இப்படத்தில் நடித்திருந்தார்.
ரசிகர்களால் விரும்பப்பட்ட சேது திரைப்படம் தேசிய விருதையும் வென்றது. இதுதவிர்த்து சில்வர் லோட்டஸ் விருது மற்றும் சிறந்த வட்டார மொழித் திரைப்படம் போன்ற விருதுகளையும் வென்றது. இப்படத்தின் வெற்றியால் தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சேது படம் ரீ-மேக் செய்து வெளியிடப்பட்டது.