மூன்று மணி நேர சினிமா என்பது அன்று முதல் இன்று வரை மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாகும் .
தற்போது தமிழில் வெற்றி பெற்ற பழைய படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்வது சினிமா உலகின் டிரெண்டாகி வருகிறது. தற்போதைய தலைமுறையினரும் கொண்டாடும் அளவுக்கு தமிழ் சினிமாவின் வெற்றித் திரைப்படங்களை ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
கர்ணன், வசந்த மாளிகை, உலகம் சுற்றும் வாலிபன், வேட்டையாடு விளையாடு, முத்து பாட்ஷா உள்ளிட்ட அப்போதைய வெற்றிப்படங்கள் பல ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. விஜயின் கில்லி படமும் சமீபத்தில் ரீ-ரிலீஸில் கோடிகளை வசூலித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவின் தன்னம்பிக்கை நாயகனாக ரசிகர்களால் அன்புடன் ‘தல’ என்றழைக்கப்படும் நடிகர் அஜித் குமாரின் ‘பில்லா’ திரைப்படம் அவரின் பிறந்த நாளான நாளை (மே 1) ரீ-ரிலீஸ் செய்யப்படும் செய்திகள் அவரது ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. இது 2007ல் வெளிவந்த அஜித்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப் படமாகும்.
இப்படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் ஒரு பேட்டியில், "பில்லா படம் ரீரிலீஸ் ஆகும் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஆகிவிட்டன. 2007ஆம் ஆண்டு ரிலீசான பில்லா திரைப்படத்தை அப்பவே நான் தியேட்டரில் போய் பார்க்கவில்லை. பயந்து ஓடிவிட்டேன். இப்பொழுது மறுபடியும் ரீரிலீஸ் ஆவுவதை நினைக்கும்போது சந்தோஷமாக ரசிகர்களுடன் மீண்டும் பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்."
மேலும், "அஜித்துக்கு என ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. அஜித் சும்மா திரும்பிப் பார்த்தாலே வேற மாதிரி இருக்கும். பில்லா படம் ஒர்க் அவுட் ஆனதற்கும் அவருடைய அந்த ஸ்டைல் தான் காரணம். நேச்சுரலாகவே அஜித்துக்கு ஒரு ஸ்வாக் இருக்கிறது. அதுதான் இந்த பில்லா படத்தில் வொர்க் அவுட் ஆச்சு" எனக் கூறி மகிழ்ந்துள்ளார்.
ஒவ்வொரு நடிகரின் தனிப்பட்ட ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் இந்த ரீரிலீஸ் படங்கள் குறித்து பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்? எதனால் ரீரிலீஸ் படங்களை விரும்புகிறார்கள்?
கார்த்திகேயன் சேலம் (சினிமா ஆர்வலர்)
"குடும்பத்துடன் தியேட்டர் சென்று நல்ல படங்களைப் பார்த்த காலமெல்லாம் மலையேறிப்போச்சு. இன்று வரும் படங்களில் முகம் சுளிக்க வைக்காத காட்சிகள் கொண்டது எது எனத் தேடினால் ஒன்றிரண்டு தேறும். அந்த அளவுக்குப் பிள்ளைகளுடன் சேர்ந்து பார்க்க முடியாத அளவுக்கு படங்கள் வருகிறது.
பெண்கள் எல்லோரும் டிவி சீரியலில் மூழ்கிவிட்டார்கள். பிள்ளைகள் வெப்சீரிஸில் பார்க்கிறார்கள். எங்களைப் போன்ற சினிமா ஆர்வம் உள்ளவர்களுக்கு இது போன்று ரீரிலீஸ் செய்யப்படும் படங்கள் ஆறுதலாக உள்ளது.
எந்தக் காலத்திலும் பார்த்து ரசிக்கும்படியான எந்த நடிகர் நடித்திருந்தாலும் நல்ல கதையம்சம் கொண்ட அந்நாளைய படங்களை மீண்டும் புதிதாகப் பார்க்கும் அதே உணர்வுடன் பார்க்கத் தயாராக உள்ளோம்.
புதுப்படங்கள் போட்டு நஷ்டம் அடைவதைவிட ரீரிலீஸ் படங்கள் அதிபர்களுக்கு அதிக வசூல் தருவதாலும், ரசிகர்களுக்கு (நல்ல கதைகள் இல்லாத இன்றைய திரைப்படத்தை பார்ப்பதைவிட) உற்சாகம் தரும் அந்த கால திரைப்படங்களை பார்ப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக இருப்பதாலும் ரீ ரிலீஸ் அனைவராலும் ஏற்கப்பட்டு உள்ளது."