

அந்தரன் விமர்சனம்: மர்ம மரணங்களும் விறுவிறுப்பான போலீஸ் விசாரணையும்!
அந்தரன் என்ற சொல்லுக்கு 'வேடன்' என்று அர்த்தம். மறைந்திருந்து தாக்குபவன் என்றும் பொருள் கொள்ளலாம். ஏற்கனவே எம்.ஜி.ஆர் நடிப்பில் வேட்டைக்காரன், சரத்குமார் நடிப்பில் வேடன் போன்ற தலைப்புகளில் படங்கள் வெளிவந்திருப்பதால், சங்க இலக்கியத்தில் தேடிப்பார்த்து இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார்கள்.
ப்ரஜின் பத்மநாபனின் முதல் படம் டிஷ்யூம் (2006) ஆக இருந்தாலும், அவர் நாயகனாக நடித்த முதல் படம் மணல் நகரம் (2015). மலையாளம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இது வெளியானது. இதுவரை பெரிய கமர்ஷியல் வெற்றியைப் பெறாத இவர், 20 வருடங்களாகப் போராடி முதன்முதலாக ஒரு ஹிட் படத்தில் நடித்திருக்கிறார்.
நாயகி தன் அப்பாவுடன் வசித்து வருகிறார். நாயகியைத் திருமணம் செய்ய முயற்சித்தாலோ, காதலித்தாலோ, நெருக்கமாகப் பழக முயற்சித்தாலோ அவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதுபோல் மூன்று மரணங்கள் நிகழ்கின்றன. தன் அப்பாதான் ஜாதி வெறியில் அவர்களை ஆணவக்கொலை செய்துவிட்டாரோ என நாயகி சந்தேகப்படுகிறார்.
போலீசில் நாயகி புகார் கொடுக்கிறார். நாயகன்தான் இந்த வழக்கினை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி. இந்த வழக்கு சம்பந்தமாக நாயகியை அடிக்கடி பார்க்க வந்தவர், ஒரு கட்டத்தில் நாயகியின் மீது காதலில் விழுகிறார். நாயகியைச் சின்ன வயதிலேயே காதலித்துவிட்டு ஊரை விட்டு ஓடிப்போனவர்தான் நாயகன். இப்போது நாயகனுக்கும் மரண தேதி நெருங்குகிறதா? யார் கொலையாளி என்பதை எப்படிக் கண்டுபிடித்தார்? என்பதே மீதித் திரைக்கதை.
நாயகியாக இவானா அமைதியாக, அழகாக நடித்திருக்கிறார். 'இந்தப் பூனையும் பால் குடிக்குமா?' என்ற ரேஞ்சுக்கு இருந்தவர், கடைசி அரை மணி நேரத்தில் பைபோலார் டிஸ்ஆர்டர் (Bipolar Disorder) பாதிக்கப்பட்டவராக, கண் சிமிட்டும் நேரம் பட கார்த்திக் மாதிரி மிரட்டலான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
நாயகனாக ப்ரஜின். போலீஸ் அதிகாரிக்குரிய க்ளோஸ் கட்டிங் ஹேர் ஸ்டைல், உடல்மொழி, போலீஸ் தோரணை எல்லாம் பக்கா!
போலீஸ் விசாரணை குழுவில் இருப்பவர்களாக வரும் ஐஸ்வர்யா கண்ணன், பிரியங்கா செல்வி இருவரும் நல்ல நடிப்பு. ஆனால், அவர்களுக்கான ஸ்க்ரீன் ஸ்பேஸ் குறைவு. இன்னும் நன்கு பயன்படுத்தி இருக்கலாம்.
டாக்டராக வரும் அனுபமா குமார் கச்சிதம். அவர் சொல்லும் சில விஷயங்கள் நமக்குப்புதிது. நாயகியின் அப்பாவாக வரும் சாம்பசிவம் நல்ல நடிப்பு. இவர்தான் படத்தின் தயாரிப்பாளர். ஆதிரன், பத்மேன், செந்தில் குமாரி என அனைவருமே அவரவருக்குத் தரப்பட்ட பாத்திரங்களைச் சரியாகக் கையாண்டிருக்கிறார்கள்.
ஹரி எஸ்.ஆர் தான் இசை. ஒரு டார்க் த்ரில்லர் படத்தில் பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும் என்று உணர்ந்து பி.ஜி.எம் அமைத்திருக்கிறார்.
கிஷோர் ராமச்சந்திரனின் ஒளிப்பதிவு சிறப்பு. நாயகிக்கான க்ளோசப் ஷாட்கள், இரவு நேரக் காட்சிகளைப் படமாக்கிய விதம் இரண்டும் குட்.
சசிகுமாரின் கலை இயக்கம் கச்சிதம்.
சண்டைக் காட்சிகளை வடிவமைத்த ராம்குமார் பாராட்டுக்குரியவர்.
இக்னேசியஸ் அஸ்வின், சதீஷ் குரோசோவா இருவரும் எடிட்டர்கள். முதல் பாதி மிக நீளம். பல காட்சிகளில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். வசனங்களை இன்னும் ட்ரிம் பண்ணியிருக்கலாம்.
கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பவர் சந்தோஷ் ராவணன். முதல் பாதியைக் குடும்பப் படம் போலவும், பின் பாதியை சைக்காலஜிக்கல் மிஸ்ட்ரி த்ரில்லர் போலவும் இயக்கியிருக்கிறார்.
கடைசி அரை மணி நேரக் காட்சிகள் படத்துக்குப் பெரிய பிளஸ்.
நாயகியின் அப்பா அல்லது நாயகன் இருவரில் ஒருவர் தான் கொலையாளி என்பது போல் மாறி மாறி சந்தேக வளையத்திற்குள் கொண்டு வருவது நல்ல யுக்தி.
நாயகியின் வித்தியாசமான பைபோலார் டிஸ்ஆர்டர் நடிப்பு தமிழ் சினிமாவுக்குப் புதுசு (மயக்கம் என்ன, 3 ஆகிய படங்களில் தனுஷ் செய்த பாத்திரம் போன்றது).
முத்தம் சம்பந்தப்பட்ட ஒரு க்ளூவை வைத்து புலனாய்வு செய்யும் இடம் பரபரப்பு (இதுபோன்ற ஒரு யோசனை தமிழ் சினிமாவில் இதுவரை வந்ததில்லை).
கொலைகாரனைக் கண்டுபிடிக்க நாயகன் போடும் திட்டமும், விரிக்கும் வலையும் அருமை.
முதல் பாதி மிக நீளம். தேவையில்லாத காட்சிகள் மற்றும் வசனங்கள்.
பெண்களுக்கு அறிவுரை சொல்வது போல் சில காட்சிகள் இருக்கின்றன. ஏன் ஆண்களுக்கு யாரும் அறிவுரை சொல்வதில்லை? அவர்கள் சொல்பேச்சுக் கேட்காத சுந்தரர்கள் என்பதாலோ?
அடல்ட் கன்டென்ட் வார்னிங் (Adult Content Warning): 16+
வித்தியாசமான, பரபரப்பான, விறுவிறுப்பான லோ பட்ஜெட் க்ரைம் சைக்காலஜிக்கல் மிஸ்ட்ரி த்ரில்லர் இது. பார்க்கலாம்.
ரேட்டிங்: 2.5 / 5
இந்த விமர்சனத்தைப் படிப்பதன் மூலம், வாரயிறுதியில் தியேட்டருக்குச் சென்று பார்க்க ஒரு புதுமையான சைக்காலஜிக்கல் க்ரைம் த்ریلலர் படம் ரெடியா என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்வதோடு, உங்கள் நேரத்தையும் பணத்தையும் சரியான படத்திற்குச் செலவிட முடியும்.