தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ. இயக்குநர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர் 2013-ல் ‘ராஜா ராணி’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் வெற்றிப்படமாக அமைத்து இவருக்கு ரசிகர்கள் இடையே நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. அடுத்த படமே கலைப்புலி தாணு தயாரிப்பில், இளையதளபதி விஜயை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததுடன் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து விஜயை வைத்து ‘மெர்சல்', ‘பிகில்' போன்ற படங்களை இயக்கிய அட்லீ தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உருவாகி உள்ளார்.
இயக்குனராக வலம் வந்த அட்லீ 2017-ம் ஆண்டு வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.
இதனிடையை 2023-ல் ஷாருக்கான் - நயன்தாரா கூட்டணியில் இந்தியில் அட்லீ இயக்கிய ‘ஜவான்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதன் மூலம் இந்தியிலும் தனது வெற்றிக்கொடியை நாட்டினார் இயக்குனர் அட்லீ.
தமிழில் வெளியான தெறி படத்தின் ரீமேக்கை இந்தியில் வருண் தவான், கீர்த்தி சுரேஷை வைத்து 'பேபி ஜான்' என்ற படத்தை எடுத்தார். இந்த படமும் இவருக்கு பாலிவுட்டில் பேர் சொல்லும் படமாக அமைந்தது.
தற்போது அட்லீ தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ரூ.600 கோடி பட்ஜெட்டில் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை அட்லீ ஹாலிவுட் தரத்திற்கு மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்போவதால் இப்போதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க தீவிர பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் படத்தில் நடிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பு நடிகர்கள் எல்லோருக்கும் பயிற்சி அளிக்கும் விதமாக பயிற்சி பட்டறை நடத்தி ரிகர்சல் பார்க்க போகிறாராம் அட்லீ. அதன்படி அடுத்த மாதம் முழுவதும் இந்த பயிற்சி பட்டறை நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
ஷூட்டிங்கை ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கி அடுத்த ஆண்டு படத்தை வெளியிட அட்லீ திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.