'நான் ஒரு தடவ சொன்னா...!' - தியேட்டர்களை தெறிக்கவிட வரும் 'பாட்ஷா'! நாளை முதல் கோலாகல ரிலீஸ்!

Baashha
Baashha
Published on

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான பாட்ஷா சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீரிலீஸாகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியடைந்த 'பாட்ஷா' திரைப்படம், வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த அறிவிப்பு, அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி!’ போன்ற மறக்க முடியாத வசனங்கள், அதிரடி சண்டைக் காட்சிகள், ரஜினியின் மாஸான நடிப்பு என ‘பாட்ஷா’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் போதெல்லாம், இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தேவாவின் இசை படத்திற்குப் பெரும் பலம் சேர்த்தது. குறிப்பாக, "ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்", "ஸ்டைலு ஸ்டைலு தான்", "தங்க மகன்", "அழகு அழகு" போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன. ரஜினியின் அறிமுகம் மற்றும் பாட்ஷாவாக அவர் மாறும் காட்சிகளுக்கான பின்னணி இசை, ரசிகர்களின் புல்லரிப்பை ஏற்படுத்தின.

இதையும் படியுங்கள்:
ஃபெங்சுயி வாஸ்து மூலம் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் 10 வகை ஜேட் செடிகள்!
Baashha

தேவாவின் இசைக்கு ரஜினிகாந்த் ஒரு தங்கச் சங்கிலியை பரிசளித்துப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. ரகுவரன் ஏற்று நடித்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம், ரஜினிகாந்தின் மாஸுக்கு இணையாக ஒரு வலுவான வில்லனாக அமைந்தது. இன்றும் தமிழ் சினிமாவில் மாஸ் வில்லன் கதாபாத்திரங்களுக்கான அடையாளமாக மார்க் ஆண்டனி கதாபாத்திரம் திகழ்கிறது.

சத்யா மூவிஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம், அதன் 30வது ஆண்டு விழாவையும், சத்யா மூவிஸ் நிறுவனத்தின் 60வது பொன்விழாவையும் கொண்டாடும் வகையில், புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் மீண்டும் வெளியிடப்படுகிறது. ரசிகர்கள் இந்த கிளாசிக் படத்தைப் புதிய அனுபவத்தில் ரசிக்கும் வகையில், ‘பாட்ஷா’ திரைப்படம் 4K தெளிவுத்திறன் மற்றும் Dolby Atmos ஒலியமைப்புடன் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் மறு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சூப்பர் ஸ்டாரின் 'பாட்ஷா' திரைப்படம் நாளை, ஜூலை 18, 2025 அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக மீண்டும் வெளியாகவுள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெரிய திரையில் தங்களது அபிமான பாட்ஷாவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு பொன்னான தருணம் என்றே கூறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com