பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1ம் பாகம் மற்றும் 2ம் பாகம் இரண்டையும் ஒரே படமாக உருவாக்கி வெளியிடப்போவதாக ராஜமௌலி தனது எக்ஸ் தளத்தில் அறிவித்திருக்கிறார்.
கடந்த 2015ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படம் வெளியாகி ரூ600 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தின் மூலமே ராஜமௌலி பிரம்மாண்ட படங்களின் இயக்குனர் என்ற பட்டத்தைப் பெற்றார். அதேபோல் இரண்டாம் பாகம் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 1800 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்தது. சொல்லப்போனால் படத்தின் கதை இரண்டு பாகங்களிலேயே முழுமை பெற்றது.
ஆனால், பாகுபலி 3 படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இதனையடுத்து RRR படத்திற்கு முன்னரே பாகுபாலி 3 படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சற்றும் எதிர்பாராவிதமாக ஆர்.ஆர்.ஆர் படம் வெளியானது. இப்படம் உலகளவில் இந்திய படங்களின் தரத்தை எடுத்துக்காட்டியது.
இப்படியான நிலையில்தான் சற்றும் எதிர்பாராத ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இயக்குநர் ராஜமௌலி தனது சமூக வலைத்தளத்தில், "பாகுபலி... பல பயணங்களின் தொடக்கம், எண்ணற்ற நினைவுகள் மற்றும் எல்லையற்ற உத்வேகம். 10 ஆண்டுகள் ஆகிவிட்டன, இப்போது #BaahubaliTheEpic மூலம் இந்தச் சிறப்பு மைல்கல்லை மீண்டும் நினைவுகூரும் வகையில் வருகிறது. அக்டோபர் 31, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில்" என்று பதிவிட்டுள்ளார். தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டாவும் இந்த ரீ-ரிலீஸ் குறித்து கடந்த ஏப்ரலிலேயே சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார்.
பாகுபலி: தி எபிக் திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் அதே மாயாஜாலத்தை நிகழ்த்துவதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும் பாகம் 1 மற்றும் 2 என தனி தனியாக வெளியாகும்போதே கோடி கணக்கில் வசூல் செய்து இந்திய அளவில் பெரும் பெருமையை சேர்த்தது. இப்போது இரண்டும் ஒன்றாகி வெளியாகும்போது சொல்லவா வேண்டும். அதாவது பட்ஜட் போடாமல், வசூலை ஈட்ட இது ஒரு ட்ரிக் என்று கையில் எடுத்திருக்கிறார்கள் போல… பார்ப்போம் இப்படம் எந்தளவிற்கு ரசிகர்களை ஈர்க்கிறது என்று.