அன்றும், இன்றும் சினிமா..!

Cinema
Cinema
Published on

சினிமா அன்று ஒரு பொழுது போக்கு அம்சமாக துவங்கி இன்று பலருக்கு அத்தியாவசியமாகி விட்டது. அன்றிலிருந்து இன்று வரையில் பல பரிமாண வளர்ச்சியை கண்டுள்ளது.

அன்று சினிமா படங்களில் பாட்டுக்கள் பிரதானம். பாட்டுக்களின் நடு நடுவே சினிமா தோன்றி மறைந்தன. இன்று பாடல்கள் உண்டு, சினிமாவில் அவை ஒரு அங்கம் அவ்வளவுதான்.

அன்று படங்களில் வசனங்கள் பேச ஆரம்பித்தால், ஒரு தூக்கம் போட்டு முடித்தால் கூட ஆரம்பித்த வசனம் முடிந்து விட்டதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. இன்று வசனம் ஒரு வார்த்தை அல்லது இரு வார்த்தைகளிலும் உண்டு. சில படங்களில் வசனங்கள் மவுன மொழியிலேயே பேசிவிடுகின்றனர்.

அன்று சினிமாக்களில் கதாநாயகன் ஏழையாக இருந்தாலும், ஒரு சீன்லையாவது கோட், சூட், டை, பூட் இவற்றில் காட்சி அளிக்காமல் போக மாட்டார். இன்று கிழிந்த பேண்டுக்களில் கதா பாத்திரங்கள் கட்டாயம் தோன்றியாக வேண்டும்.

பாரம்பரிய ராகங்களோடு பாட்டுக்கள் ஒலித்தன, அன்று. காதுகளின் ஜவ்வு பிய்ந்து போகும் அளவுக்கு சப்தங்களுக்கு பஞ்சமில்லை இன்று, சில படங்களில்.

அன்று படங்களில் வரும் கடிதத்தை படிக்கும் பொழுது கதாநாயகனோ, கதாநாயகியோ கடிதத்தின் நடுவில் தோன்றி அதை படிக்க தவற மாட்டார்கள். இன்று நோ லெட்டர்ஸ், சகலமும் மொபைல் போன்தான்.

அன்று படங்களில் கனவு சீன்கள் இல்லாமல் படமே இருக்காது. அதில் வெள்ளை புகை மண்டலம் நடுவே டூயட் பாட்டு நிச்சயம், பார்ப்பவர்களை படுத்தி எடுத்ததும் உண்டு. இன்று வேற லெவல்.

அன்று கதை, இசை, நடிப்பு இவற்றிற்கு பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். இன்று சில படங்களில் இவைகளில் சில மிஸ்ஸிங்காக இருந்தாலும் படம் வந்து ஓடி விடுகின்றது.

இதையும் படியுங்கள்:
25 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கிய நடிகர்… அவரே கூறிய சுவாரசிய சம்பவம்!
Cinema

அன்று கோஷ்டி கானம் முக்கியம். இன்று ஒருவர் அல்லது இருவர் பாடுவதே சாதனை.

அன்று 100 நாட்கள், 25 வாரங்கள் ஓடியும், வெள்ளி விழா கொண்டாடப் பட்ட படங்களும் இருந்தன. இன்று ஒரு ஷோ ஓடினாலே சாதனை என்ற நிலைக்கு தள்ளப் பட்டுவிட்டது, சினிமா உலகம்.

அன்று கருப்பு வெள்ளை படங்கள் வலம் வந்தன. பிறகு வண்ணப் படங்கள் வெளிவர தொடங்கின. இன்று கலர் படங்கள் மட்டும் தான்.

அன்று டூரிங் கொட்டகைகள், சினிமா ஹால்கள், தியேட்டார்கள் என்று படி படியாக முன்னேறின. இன்று இவை எல்லாம் காணாமல் போனதே சினிமா உலகின் பரிமாண வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டு.

அன்று சினிமா ஷூட்டிங் ஸ்டுடியோக்களில் படப் பிடிப்புக்கள் செட்டுக்கள் போட்டு எடுக்கப்பட்டன. இன்று அவுட் டோர் லோகேஷன்களில் முழு படங்களும் முடிந்து விடுகின்றன.

அன்று பெட்டிகளில் சுருள்கள் வந்தால் தான் படம் பார்க்க முடியும் இன்று எல்லாம் டிஜிட்டல் மயம்.

அன்று மேக்கப் அடிக்க வரும். இன்றைய சூழ்நிலையில் லேசான டச்சப்பில் மேக்கப் ஓவர்.

அன்று பட பிடிப்பு இல்லாவிட்டால் ஸ்டுடியோ மரத்தடிகளே அபயம் அளித்தன. இன்று கேராவான் இல்லாமல் சினிமாவே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com