பிப்ரவரி 17 மற்றும் 18ம் தேதிகளில் சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் முதன்முறையாக ‘காமிக் கான்’ நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதனால் காமிக் ரசிகர்கள் ஒரே குஷியில் உள்ளனர்.
பொதுவாக காமிக் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக மார்வல், DC, டிஸ்னி கதாப்பாத்திரங்கள் உலகளாவிய ரசிகர்களை ஈர்த்துள்ளன. அதேபோல் மார்வல் vs டிசி என்றால் அவ்வளவுத்தான் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். அந்தவகையில் சமீபக்காலமாக நரூட்டோ என்ற அனிமியும் பெரிய ரசிகர் பட்டாலத்தையே உருவாக்கிக்கொண்டுள்ளது. இப்படி அனிமி மற்றும் காமிக் பெரிய அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ளதால் 'காமிக் கான் இந்தியா' என்ற அமைப்பு சென்னையில் 'காமிக் கான்' என்ற நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.
சென்னையில் முதன்முறையாக நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு சர்வதேச காமிக் ஓவியர்களான 'பேரண்ட்' மற்றும் 'ஜான் லேமேன்' ஆகியோரின் படைப்புகள் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தவுள்ளன. இவர்களின் ஓவியம் காட்சிக்காக வைக்கப்படவுள்ளதால் இருவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். மேலும் இந்தியாவில் உள்ள பல சிறந்த ஓவியர்களின் ஓவியங்களும் அங்கு காட்சிப்படுத்தவுள்ளன.
அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் ‘அமர் சித்ரா கதா’ என்ற காமிக்ஸ் சீரிஸின் ஆர்டிஸ்ட்களும் நரூட்டோ அனிமிக்கு குரல் கொடுத்த ஆர்டிஸ்ட்களும் பங்குப்பெற உள்ளனர். அதேபோல் பல முன்னணி இந்திய காமிக்ஸ் டப்பிங் ஆர்டிஸ்ட்களும் பங்கேற்கவுள்ளனர்.
மேலும் நிகழ்ச்சியை இன்னும் உற்சாகமாக்க பல குழந்தை காமிக்ஸ் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரங்கள் போல் மாறு வேடம் அணிந்து கலந்துக்கொள்ளப் போகிறார்கள். இதனை Cosplay என்று கூறுவார்கள்.
பிப்ரவரி 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் நாளன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துக்கொள்ள உள்ளார். அவர் ஒரு முரட்டுத்தனமான டிசி ரசிகர் என்பதை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி காமிக் கான் இந்தியாவின் நிறுவனர் கூறியதாவது, “காமிக் கான் என்பது ஒரு நிகழ்வு மட்டுமல்ல, பலர் ஒன்றாகக் கூடி சந்தோஷங்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு மகிழ்ச்சியான தருணமும் கூட. இதற்கு முன் இந்தியாவில் நடந்த காமிக் கான் நிகழ்ச்சிகளில் சுமார் 1 லட்சம் காமிக் ரசிகர்கள் கலந்துக்கொண்டனர். கலை மற்றும் படைப்பாற்றலின் மையப்பகுதியான சென்னையில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.