

பொதுவாக ஸ்போர்ட்ஸ் ட்ராமா என்றால் முதல் பாதி திரைக்கதையில் நாயகன் எப்படி எல்லாம் விளையாட சிரமப்படுகிறான் என்பதையும் பின் பாதியில் தடைகளை மீறி அவன் எப்படி ஜெயித்தான் என்பதையும் காட்டுவார்கள். இதற்கு, வெண்ணிலா கபடிக்குழு, கனா, அஸ்வினி, ஆடுகளம், சென்னை 28, இறுதி சுற்று, சார்பட்டா பரம்பரை என ஒரு பெரிய பட்டியலே இடலாம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இப்படத்தில் முதல் பாதி ஸ்போர்ட்ஸ் ட்ராமா, பின் பாதி முழுக்க கோர்ட் ரூம் ட்ராமா என வித்தியாசமான திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
இப்போது உலகக் கால்பந்து போட்டி நடக்கிறது. ஆனால் இந்தியா அதில் விளையாடவில்லை. காரணம் தகுதிச்சுற்றில் தேர்வாகவில்லை. இது ஏன் ?
அஜித்குமார் சமீபத்தில் வருத்தமாக ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். இந்தியாவில் கிரிக்கெட் மட்டும் தான் கொண்டாடப்படுகிறது. மற்ற விளையாட்டுகள் ஓரம் கட்டப்படுகின்றன என்றார். கார் ரேஸ்க்கு ஸ்பான்சர் கிடைக்காத வருத்தத்தில் அவர் சொன்னார். இந்த அரசியலை எல்லாம் தெளிவாக இந்தப் படம் பேசுகிறது.
இந்தப்படத்தின் நாயகன் பற்றி சிறப்பு செய்தி உண்டு. கமல், விக்ரம், சூர்யா வரிசையில் கேரக்டருக்காகத் தன்னை வருத்திக்கொள்வதில் இவரும் விற்பன்னர். சுமார் 2 ஆண்டு காலம் கடும் பயிற்சி மூலம் நிஜ ஓட்டப்பந்தய வீரராகவே மாறி இருக்கிறார். படம் எப்படி இருக்கு எனப்பார்ப்போம்.
விளையாட்டு அரசியலைத் தோலுரிக்கும் அதிரடித் திரைப்பட விமர்சனம்
நாயகன் தூய்மைப் பணியாளரின் மகன். தடகள விளையாட்டில் பல சாதனைகளைப் படைக்கிறான். ஓட்டப்பந்தயங்கள் பலவற்றில் கலந்து கொண்டு ஜெயிக்கிறான். ஆனால் தகுதி இருந்தும் காமன்வெல்த் போட்டியில் நாயகன் பங்கு பெற முடியாமல் தடுக்கின்றனர் சிலர். இதனால் கோர்ட் படி ஏறி நியாயம் கேட்கிறான். அவனுக்கு நியாயம் கிடைத்ததா? என்பது மீதித் திரைக்கதை.
நாயகனாக கே ஜி ஆர் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். ஜிம் போய் பாடியை செம பிட்(fit) ஆக மாற்றி இருக்கிறார். அவர் உழைப்புக்கு ஒரு சபாஷ்.
அரசுக்கு ஆதரவாக வாதாடும் அட்வகேட் ஜெனரலாக வரும் விஜி வெங்கடேஷின் உடல் மொழி, கம்பீரம், டயலாக் டெலிவரி, நடிப்பு எல்லாமே பிரமாதம். ஜட்ஜ் ஆக வரும் மோகன் ராம் நடிப்பு பாந்தம்.
பயிற்சியாளராக வரும் வசுந்தரா, விளையாட்டுத்துறை அதிகாரியாக வரும் அஜித் ஜோஷி, ஸ்போர்ட்ஸ் மினிஸ்டராக வரும் மன்சூர் அலிகான் அனைவர் நடிப்பும் அருமை.
என் உயிர்த்தோழன் புகழ் ரமா, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கிறார். கண் கலங்க வைக்கும் நடிப்பு. க்ளைமாக்சில் உருக்கி விட்டார்.
நாயகனின் தங்கையாக வரும் இசபெல்லா கவனிக்க வைக்கிறார் என்றால், விளையாட்டு வீராங்கனையாக வரும் சிந்தூரியின் உடற்கட்டு அச்சு அசல் ஸ்போர்ட்ஸ்வுமன் போலவே இருப்பது சிறப்பு. விஸ்வநாத்தின் ஒளிப்பதிவு கச்சிதம். ஷான் லோகேஷின் எடிட்டிங் ஓக்கே ரகம். இசை ஜிப்ரான். பாடல்கள் பாஸ் ரகம். பின்னணி இசையில் இன்னமும் ஜால வித்தை செய்திருக்கலாம். கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் தென்பாதியான்.
சபாஷ் டைரக்டர்
இந்தியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்டா? ஹாக்கியா? என்ற விவாதத்தில், இந்தியாவுக்கு என தேசிய விளையாட்டே ஒன்று இல்லை என்பதைப்பதிவு செய்த விதம் செம என்றால் அந்த விஷயம் ஜட்ஜூக்கே தெரியாத தகவல் என்பது வியப்பு.
வசனகர்த்தா தான் படத்தின் பெரிய பலம். கலக்கலான வசனங்கள் கை தட்டலைப்பெறுகின்றன.
கிரிக்கெட் என்பது விளையாட்டே இல்லை, அது ஒரு போதை என்ற கருத்தைப் பதிவு செய்த விதம் சபாஷ்!
இந்தியாவில் கவனம் பெறாத விளையாட்டுக்கள் பட்டியல் என நாயகன் 35 விளையாட்டுக்களை வரிசையாக சொல்லும்போது தியேட்டரில் அப்ளாஸ்.
இது ஒரு உண்மை சம்பவத்தின் படமாக்கம் என்பதை க்ளைமாக்சில் சொன்ன விதம், அந்த நபரைக்காட்டி கவுரவப்படுத்தியது அருமை.
நீதித்துறையில் சாதியப்பாகுபாடு எப்படி இருக்கிறது என்பதைக்காட்டிய விதம்.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் பட்டறையிலிருந்து வந்தவர் என்பதைப் பறைசாற்றும் விதமாய் காட்சி அமைப்புகளில் கவனம் காட்டியது கச்சிதம்.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
ஆவணப்படத்தின் தாக்கம் திரைக்கதையில் தெரிகிறது. இன்னமும் கொஞ்சம் கமர்ஷியலாக சொல்லி இருந்தால் வெகுஜன மக்களுக்கும் போய் சேர்ந்திருக்கும்.
இயல்பான கதையோட்டத்தில் க்ளைமாக்சில் சண்டைக்காட்சி ஹீரோயிசம் செயற்கையாகத் தெரிகிறது.
நடிகர்கள் வசனம் பேசும்போது லிப் சிங்க் ஆகவில்லை.
வட்டார வழக்கு மொழி அங்கங்கே மாறி மாறி வருகிறது.
ஃபைனல் கமெண்ட் - அழுத்தமான திரைக்கதை, அட்டகாசமான வசனங்கள், புதுமையான கோர்ட் ரூம் வாதங்கள் என ஒரு வித்தியாசமான அனுபவத்துக்கு உத்தரவாதம்.
ரேட்டிங்க் 3/5
நம் நாட்டில் கிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டுகள் எப்படி ஓரம் கட்டப்படுகின்றன என்ற நிஜ அரசியலையும், இந்திய நீதித்துறையின் தற்போதைய எதார்த்த நிலையையும் ஆழமாக விவாதிப்பதற்கான ஒரு புதிய பார்வையை நீங்கள் இதன் மூலம் பெறலாம்.