’இளையராஜா மட்டுமில்லை; இவருடைய பயோபிக்கிலும் நடிக்க ஆசை’ நடிகர் தனுஷ் பேச்சு!

தனுஷ்
தனுஷ்

‘இருவரின் வாழ்க்கை வரலாற்றிலும் நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன்’ என நடிகர் தனுஷ் தனது ஆசையை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு அடுத்தபடியாக பிஸியாக நடித்து வருபவர் நடிகர் தனுஷ். இசை உலகில் கொடிகட்டிப் பறக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. இசை ஜாம்பவான் என சொல்லக்கூடிய இவரின் வாழ்க்கை வரலாறு படத்தை எதிர்நோக்கிப் பலரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ்தான் நடிக்கிறார்.

‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன்தான் இந்தப் படத்தையும் இயக்கவுள்ளார். தன்னுடைய சொந்த கதைக்கு தானே, அதாவது இளையராஜாவே இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றும் இந்தப் படத்தின் கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தின் அறிமுக விழாவில் பேசிய நடிகர் தனுஷ், “எண்ணம் போல் வாழ்க்கை என்பதை நான் நம்புகிறேன். அதையே அடிக்கடி சொல்வேன். நம்மில் பலர் இரவில் தூக்கம் இல்லையென்றால், இளையராஜாவின் பாடலைக் கேட்டு மெய்மறந்து தூங்குவோம். ஆனால், நான் பல இரவுகள் இளையராஜாவாகவே நடித்தால் எப்படியிருக்கும் என நினைத்து நினைத்து எண்ணி தூக்கமில்லாமல் இருந்திருக்கிறேன்.

இருவரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன். ஒன்று இளையராஜா, மற்றொன்று ரஜினிகாந்த். ஒன்று நடக்கிறது. இந்த இடத்துக்கு வர முடிந்து, இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது என்பது எனக்கு மிகப்பெரிய கர்வத்தைக் கொடுக்கிறது. நான் இளையராஜாவின் பக்தன். அவரது இசைதான் எனக்குத் துணை. இது எல்லோருக்கும் பொருந்தும்.

இதைத்தாண்டி அவரது இசை, எனக்கு நடிப்பு ஆசானும் கூட. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்று தெரியாத காலத்திலிருந்து இன்று வரை, ஒரு காட்சியை படமாக்குவதற்கு முன்பு அந்தக் காட்சிக்கு தகுந்த மனநிலையில் இருக்கும் இளையராஜாவின் பாடலையோ, பிஜிஎம்-மையோ கேட்பேன்.

இதையும் படியுங்கள்:
இசையமைப்பாளர் DSP-க்கு இத்தனைப் படங்கள் கைவசம் உள்ளதா?
தனுஷ்

அந்த இசை, அந்தக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லும். அதனை அப்படியே உள்வாங்கி நடிப்பேன். அப்படி நான் நடிப்பதை வெற்றிமாறன் ஒருசில தடவை பார்த்திருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது பெரிய சவால், பொறுப்பு எனக் கூறுகிறார்கள். எனக்கு அப்படித் தோன்றவில்லை.

ஒரு கலைஞனாக, இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். இந்த அழைப்பு இளையராஜாவிடமிருந்தே வந்தது கூடுதல் மகிழ்ச்சி. இசையின் கடவுளாக நடிக்கும் வாய்ப்பை நினைத்து நெகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com