

தற்போது ஷங்கரின் மகன் அர்ஜித் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என்பது தான் கோலிவுட்டின் ஹாட் டாபிக். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் வாங்கியவர் ஷங்கர். அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டு எல்லையை தாண்டி இந்தியா முழுக்க பெரிய வெற்றி பெற்றவை. தென்னிந்திய சினிமாவில் முதல் பான் இந்தியா இயக்குனர் என்ற பெருமையும் அவரையே சேரும்.
தமிழ் சினிமாவின் முதல் 100 கோடி ரூபாய் வசூல் , முதல் 200 கோடி ரூபாய் வசூல் , முதல் 600 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படங்கள் எல்லாமே ஷங்கரின் இயக்கத்தில் உருவானவை. தற்போது தொடர்ச்சியாக சினிமா துறையில் முந்தைய தலைமுறையினரின் வாரிசுகள் அறிமுகமாகி வருகின்றன. ஷங்கர் வீட்டில் இருந்து முதன் முதலாக நடிப்புத் துறையில் கால் பதித்தவர் அவரது இளைய மகள் அதிதி. இவர் கார்த்திக் ஜோடியாக விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தற்போது தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அதிதி நடித்து வருகிறார். இவரைத் தொடர்ந்து ஷங்கரின் மகன் அர்ஜித்தும் தமிழ் சினிமாவில் நுழைய உள்ளார். திரையில் அறிமுகமாகும் அர்ஜித் திரைத்துறை சார்ந்த பல்வேறு தொழில்நுட்பங்களில் பயிற்சி பெற்றுள்ளார்.
இவர் அமெரிக்காவில் திரைப்படத் தயாரிப்பு மற்றும் இயக்கம் பற்றிய படிப்புகளில் முறையாக பயிற்சி பெற்று தேர்ச்சியும் பெற்றுள்ளார். மேலும் இந்தியாவில் புகழ்பெற்ற 'நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா' நிறுவனத்தில் நடிப்பிற்கான பயிற்சியையும் பெற்றுள்ளார். பெரிய இயக்குனரின் மகன் என்றாலும் , தனக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டே சினிமாவில் நுழைகிறார்.
அர்ஜித் திரையில் அறிமுகமாகும் லவ்வர் பாய் என்ற புதிய திரைப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் இந்த விழாவிற்கு வருகை தந்தனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் , H.வினோத் , ஷங்கர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்த பூஜையில் முதல்வர் விஜயின் மகனும் , 'சிக்மா' திரைப்படத்தை இயக்கும் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டார். சஞ்சய் இயக்கும் திரைப்படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டதால் , படத்தின் வெளியீட்டு தொடர்பான வேலைகள் நடந்து வருகின்றன. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் அந்த திரைப்படம் இந்த ஆண்டு ஜூலை 31 தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் சிறு வயதிலிருந்து அர்ஜித்தின் நெருங்கிய நண்பர். ஷங்கர் சஞ்சயின் தாத்தா S.A.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். அதனால் , இந்த இரண்டு குடும்பத்திற்கும் உள்ள தொடர்பு மூன்றாம் தலைமுறைக்கும் பரவியுள்ளது. பெரிய இயக்குனரின் மகன் கதாநாயகனாக அறிமுகமாவதும் , தமிழ் சினிமாவின் பெரிய நடிகரின் மகன் இயக்குனராக அறிமுகமாவதும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். அசோக் என்பவர் படத்தை இயக்க உள்ளார். இவர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் , அட்லி ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபேஷன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் அர்ஜித் நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கிறது. விரைவில் பட தயாரிப்பு நிறுவனம், படத்தில் பணியாற்ற உள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை அறிவிக்க இருக்கிறார்கள்.