

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான இயக்குனர் என்ற புகழ் பெற்றவர் ஷங்கர். ஜென்டில்மேன் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானதிலிருந்து, ஷங்கர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படமும் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அப்போதெல்லாம் ஒரு மாநிலத்தை தாண்டி ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது சாதாரணமான விஷயம் அல்ல. தென்னிந்திய சினிமாவில் ஷங்கர் மற்றும் மணிரத்தினம் திரைப்படங்கள் மட்டுமே தமிழை தாண்டி பல மொழிகளிலும் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
90 களில் தொடங்கி 2020 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி திரைப்படங்களின் வசூலை, ஷங்கரின் திரைப்படங்கள் எளிதில் முறியடித்து விடும். ஒரு இயக்குனராக இந்திய அளவில் மிகப்பெரிய மார்க்கெட்டை வைத்திருந்தது அன்றைய காலகட்டத்தில் ஷங்கர் மட்டுமே. ஜென்டில்மேன் , காதலன் ஆகிய இரண்டு திரைப்படங்களின் பான் இந்தியா வெற்றி, ஒட்டுமொத்த இந்திய திரை உலகை தமிழ் சினிமாவின் பக்கம் திருப்பியது.
ஷங்கர் திரைப்படங்களில் அவர் பயன்படுத்தும் அதை நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இந்திய அளவில் போட்டியே இல்லாமல் இருந்து வந்தது. அறிமுக கதாநாயகன் பிரபுதேவாவை வைத்து ஷங்கர் இயக்கிய 'காதலன்' திரைப்படம் தென்னிந்திய மொழிகளை தாண்டி ஹிந்தியிலும் 100 நாட்கள் வரை ஓடி சாதனை படைத்திருந்தது. காதலனுக்கு அடுத்த திரைப்படத்தை ரஜினி வைத்து எடுக்க ஷங்கர் பெரு முயற்சி எடுத்து வந்தார்.
பெரிய மனுஷன் என்ற திரைக்கதையை ரஜினிக்காக உருவாக்கி வைத்திருந்தார். அந்த கதையில் அப்போது ரஜினிக்கு பெரிதாக நாட்டமில்லை , அதன் பின்னர் அந்தக் கதை கமலுக்கு சென்று 'இந்தியன்' என்ற பெயரில் இந்தியாவே அதிரும் அளவிற்கு பிளாக் பாஸ்டர் ஹிட்டடித்தது. அதற்கு பின்னர் ஷங்கர் இயக்கிய 'ஜீன்ஸ்' திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் , ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ரஜினிக்கு ஆர்வம் அதிகரித்தது.
இந்நிலையில் ஒருநாள் ரஜினி ஷங்கருக்கு போன் செய்து அவரது இயக்கத்தில் படம் நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன் பின்னர் எழுத்தாளர் சுஜாதா மற்றும் தனது அசிஸ்டன்ட் டைரக்டர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு , கதை விவாதத்திற்காக ஷங்கர் ஊட்டிக்கு சென்றுள்ளார். ஊட்டியில் நடைபெற்ற கதை விவாதத்தில் எழுத்தாளர் சுஜாதா உள்பட பலரும் பல கதைகளை கூறினார்கள்.
இறுதியில் ஷங்கர் மாலை 6 மணிக்கு ஒருகதையை சொல்லத் தொடங்கி, இரவு 9 மணி வரை விறுவிறுப்பாக கொண்டு சென்று முடித்தார். இந்தக் கதையை கேட்டு ரஜினி மிகவும் ஆச்சரியப்பட்டார். இந்தக் கதையில் நடிக்க அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தாலும் , படத்தில் உள்ள அரசியல் கருவால் ரஜினி நடிக்க தயங்கினார். பின்னர் அந்தக் கதை விஜய்க்கு சொல்லப்பட அவரும் மறுத்து விட்டார். இறுதியில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில் , அந்த திரைப்படம் 'முதல்வன்' என்ற பெயரில் உருவாகி தமிழ்நாடு , ஆந்திரா , கர்நாடகாவில் இமாலய வெற்றியை பெற்றது.
இறுதியில் ஷங்கர் – ரஜினி கூட்டணி 'சிவாஜி' திரைப்படத்தின் மூலம் இணைந்தது. சிவாஜியின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து எந்திரன் , 2.0 என்று தொடர்ச்சியாக ஷங்கர் ரஜினியை வைத்து வெற்றித் திரைப்படங்களை கொடுத்தார்.