விமர்சனம்: காந்தியின் கொள்கையா? காந்தி ரூபாய் நோட்டா? 'காந்தி டாக்ஸ்' முன்வைக்கும் அதிரடி அலசல்..!
ரேட்டிங்(3 / 5)
பாலிவுட் டைரக்டர் பாண்டுரங் பலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அதிதி ராவ் நடிப்பில் வந்துள்ள படம் காந்தி டாக்ஸ். இப்படம் வசனங்கள் அற்ற மௌன படமாக வந்துள்ளது. இந்த வித்தியாசமான முயற்சி எப்படி உள்ளது என்பதை இங்கே காண்போம்.
மும்பையில் உள்ள தாராவி பகுதியில் ஏழ்மையான குடும்பத்தில் வசித்து வருகிறார் விஜய் சேதுபதி. வயதான அம்மா படுத்த படுக்கையாக இருக்கிறார். இவர் வீட்டிற்கு எதிர் குடியிருப்பில் இருக்கும் அதிதி ராவ் இவரை காதலிக்கிறார். விஜய் சேதுபதி பணத்திற்காக பல வேலைகள் செய்கிறார். ஆனால் போதிய வருமானம் இல்லை. நம் நாட்டில் மகாத்மா காந்தியின் கொள்கைகள் பேசப்படுவதை விட, காந்தி படம் அச்சிடப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகளுக்கு தான் அதிகம் மதிப்பு என்று புரிந்து கொள்கிறார். இதை பெற பெரும் பணக்காரரான அரவிந்த் சாமி வீட்டில் திருட முயற்சி செய்கிறார். திருட செல்லும் போது, அரவிந்த் சாமி வேறொரு பிரச்னையில் இருக்கிறார்.
இறுதியில் ஜெயித்தது காந்தியின் கொள்கையா? அல்லது காந்தி ரூபாய் நோட்டா? என்று சொல்கிறது 'காந்தி டாக்ஸ்'. இனி, இப்படத்தின் ப்ளஸ், மைனஸ் பற்றி பார்க்கலாம்....
ப்ளஸ்
இந்த படத்தின் மிக பெரிய பலம் விஜய் சேதுபதியின் நடிப்புதான். வசனங்கள் இல்லாத இந்த திரைக்கதையில் நடித்ததற்கு பாராட்டலாம். சின்ன, சின்ன உணர்வுகளின் வழியே படம் முழுவதும் ஈர்க்கிறார் விஜய் சேதுபதி. அதிதி ராவ் கண்களின் வழியே பேசுகிறார். காதலன் தவறான வழியில் போய் விட கூடாது என்று பதறும் இடத்தில் அதிதி 'ஆஹா' 'ஓஹோ'!
அரவிந்த் சாமி உடல் மொழியில் ஒரு செல்வந்தரை கண்முன் கொண்டு வருகிறார். கிரிமினலாக வரும் சித்தார்த் ஜாவித் நடிப்பில் சிறிது நகைச்சுவை இருக்கிறது. AR ரகுமானின் பின்னணி இசை இந்த மௌன படத்தை 'பேச' வைக்கிறது.
மைனஸ்
கடந்த 1987 ஆம் ஆண்டு கமல்ஹாசன், அமலா நடிப்பில் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் 'பேசும் படம்' என்ற படம் வெளியானது. இப்படம் நகரும் விதம் வசனங்கள் தேவைப்படாத ஒன்றாக இருக்கும். படத்தின் இயல்பே வசனங்கள் இல்லாத மௌனத்தை கொண்டிருக்கும். ஆனால் இப்போது வெளியாகி உள்ள காந்தி டாக் ஸ் கதை நகரும் விதம் மௌனதிற்கானதாக இல்லை. வசனத்திற்கான தேவைதான் இருக்கிறது. மௌன படத்திற்கான சரியான ஸ்கிரிப்ட்டை அமைத்திருந்தால் இந்த படத்தின் டைரக்டர் பாண்டு ரங்க பலே கரை 'பலே' என்று பாராட்டி இருக்கலாம்.
படத்தில் இரண்டு பாடல்கள். ரகுமானின் பின்னணி இசை ஈர்த்த அளவிற்கு பாடல்கள் ஈர்க்கவில்லை.

