
தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வரும் ராசி கன்னா. ராசி கன்னா தற்போது தெலுங்கில் ‘தெலுசு கடா’ படத்தில் நடித்துள்ளார். அவருடன் சித்து ஜொன்னலகட்டா மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கும் இந்த படத்தை பிரபல ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா இயக்கி உள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி பேனரின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்த இந்த காதல் கதை நாளை (அக்டோபர் 17-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இவர் பாலிவுட்டில் 2013-ம் ஆண்டு ‘மதராஸ் கஃபே’ என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானதன் மூலம் திரைவுலகில் கால் பதித்தார்.
அதனை தொடர்ந்து 2014-ம் ஆண்டு தெலுங்கில் ‘ஓஹலுஸ் குசாகுலாடேட்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழில் 2018-ம் ஆண்டு ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இப்படத்தை தொடர்ந்து அரண்மனை 3 & 4, அயோக்யா, அடங்க மறு ஆகிய படங்களில் நடித்து தமிழில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார். தெலுங்கு, தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், திரைப்படங்களை தாண்டி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் ‘தெலுசு கடா’ பட விழாவில் கலந்துகொண்ட ராசி கன்னா பேசும்போது, படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்தார். அப்போது படத்தின் வசனங்கள் சிலவற்றை சொல்லும்போது சில கெட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டார். அவர் பேசியது பெரும் விமர்சனமாகி வரும் நிலையில், அதுதொடர்பாக ராசி கன்னா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘சத்தியமாக நான் பேசியது கெட்ட வார்த்தை என்பதே எனக்கு தெரியாது. அழகான வார்த்தை குறிப்பிடுவதாக நினைத்து தான் அந்த வார்த்தைகளை உபயோகித்து விட்டேன். அதன் அர்த்தம் தெரிந்தபோது நானும் அதிர்ந்து போனேன். யாரும் தவறாக எண்ணவேண்டாம்', என்று குறிப்பிட்டு உள்ளார்.
ராசி கன்னா தற்போது பவன் கல்யாணுடன் உஸ்தாத் பகத் சிங் படத்தில் நடித்து வருகிறார். மேலும், பாலிவுட்டில் 120 பகதூர் உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார்.