தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் குறிப்பிடத்தக்க சில இயக்குனர்களுள் ஒருவர் தான் அருண் மாதேஸ்வரன். இவர் இந்திய திரைப்படத்துறையில் இயக்குனராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் குறிப்பாக தமிழ் சினிமாவிற்காக பணியாற்றி வருகிறார். இவருடைய தனித்துவமான திரைகதையாக இருக்கட்டும் அல்லது படம் இயக்கும் பாணியாக இருக்கட்டும் ரசிகர்களின் மத்தியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தான் அமையும்.
ராக்கி (2021)
அருண் மாதேஸ்வரன் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் தான் ‘ராக்கி’. இப்படமானது உணர்ச்சிகளின் சித்தரிப்பு மற்றும் தீவிரமான கதைசொல்லல் முதலியவற்றின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது. மேலும் இது சினிமா ரசிகர்களின் பரவலான பாராட்டைப் பெற்றபடமாகும். திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் அருண் இந்த சினிமா பயணத்திற்கான சிறந்த அடித்தளத்தை அமைத்துள்ளார் என்றே சொல்லலாம்.
சானி காயிதம் (2022)
‘ராக்கி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அருண் மாதேஸ்வரன் ‘சானி காயிதம்’ என ஒரு குற்றம் சார்ந்த கதைகளத்தை இயக்கினார். இப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு இருந்த மதிப்பு கூடி இவர் தனித்துவமான பார்வை கொண்ட இயக்குனராகவும் ஏற்கப்பட்டார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் உள்ளிட்ட நடிகர்கள் தங்களுடைய மிகச்சிறந்த நடிப்பை வெளிக்காட்டியிருந்தனர். இதன் கதைகளமானது சமூக சிக்கல்களின் அடிப்படையில் பழிவாங்கும் போக்கில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். பார்வையாளர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அழுத்தமான கதைகளை வடிவமைக்கும் இயக்குனர் அருணின் திறனை இப்படம் முழுமையாகக் காட்டுகிறது.
‘கேப்டன் மில்லர்’ (2024)
‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற திரைப்படமாகும். விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் தனுஷின் சிறப்பான நடிப்பு, கதைக்களம் மற்றும் கதாபாத்திர மேம்பாடு குறித்து பெரிதும் பாராட்டினர். சமூக அநீதி மற்றும் சுதந்திரத்திற்கான போராட்டத்தை மையமாகக் கொண்டு தான் இப்படம் எடுக்கப்பட்டது. ‘கேப்டன் மில்லர்’ அதன் தலைசிறந்த கதைசொல்லல், சக்திவாய்ந்த நடிப்பு மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் கருப்பொருளின் காரணமாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
இளையராஜாவின் பயோபிக்
இசை ஜாம்பவானான இளையராஜாவின் வாழ்கை வரலாற்று திரைப்படம் வெளிவரும் செய்தியானது ரசிகர்களை அதிகளவில் குஷிபடுத்தி இருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதில் ‘இளையராஜா’ பயோபிக் படத்தை இயக்குனர் அருண்மாதேஷ்வரன் தான் இயக்கப்போவதாக கூறியிருந்தனர். இது ரசிகர்களின் மத்தியில் பல கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது. இயக்குனர் அருண் இதுவரையில் எடுத்த மூன்று திரைப்படங்களுமே வன்முறையான கதைகளம் கொண்டே அமைந்திருக்கும். அவ்வாறு இருக்க இவரால் எப்படி இசைஞானியின் பயோபிக்கை எடுக்க முடியும்? என்ற கேள்வியையும் விமர்சனங்களையும் ரசிகர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.