Sivaraj kumar
Sivaraj kumar

சிவராஜ் குமார் முன்னிலையில் கன்னட மொழியை அவமானம் செய்தாரா கமல்? வெடித்தது சர்ச்சை!

Published on

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனது 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழி குறித்து தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முன்னிலையிலேயே கமல், "கன்னட மொழி தமிழிலிருந்து பிறந்தது" என்று கூறியது, கன்னட அமைப்புகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில், கமல்ஹாசன் தனது பேச்சை "உயிரே உறவே தமிழே" என்று தொடங்கி, தனது தாய்மொழி மீதான பற்றை வெளிப்படுத்தினார். பின்னர், சிவராஜ் குமார் அரங்கத்தில் இருந்ததை சுட்டிக்காட்டி, "கன்னட மொழியானது தமிழிலிருந்து பிறந்ததால், நீங்களும் எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறீர்கள்" என்று தெரிவித்தார். சிவராஜ் குமார் இதற்கு தலையசைத்ததாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் இந்தக் கருத்து கன்னட அமைப்புகளிடையே, குறிப்பாக கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பால், கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த அமைப்பு, கமல்ஹாசனின் கருத்து கன்னட மொழி மற்றும் பாரம்பரியத்தை அவமதிப்பதாகக் கூறி, அவருக்கு எதிராக போராட்டங்களை அறிவித்துள்ளது. கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, கமல்ஹாசனின் கருத்தை "நாகரிகமற்றது" என்றும், அவர் கன்னட மக்களுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
அமெரிக்காவின் சக்தி வாய்ந்த அணு சக்தி ஏவுகணை மினிட்மேன்-III எப்படிபட்டது தெரியுமா?
Sivaraj kumar

"ஒருவர் தனது தாய்மொழியை நேசிக்கலாம், ஆனால் அதன் பெயரால் மற்ற மொழிகளை இழிவுபடுத்துவது நாகரிகமற்ற செயல். பல இந்திய மொழிகளில் நடித்திருக்கும் கமல்ஹாசன், சிவராஜ் குமார் முன்னிலையிலேயே கன்னட மொழியை அவமதித்தது ஆணவத்தின் உச்சம்" என்று விஜயேந்திரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், "கமல்ஹாசன் ஒரு வரலாற்றாசிரியர் அல்ல, எந்த மொழி எங்கிருந்து பிறந்தது என்று தீர்மானிக்க. 2500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கன்னட மொழி, செழிப்பையும் நல்லிணக்கத்தையும் குறிக்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சர்ச்சை 'தக் லைஃப்' படத்தின் கர்நாடக வெளியீட்டையும் பாதிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. சில கன்னட அமைப்புகள் படத்தின் சுவரொட்டிகளை கிழித்து எறிந்துள்ளன. சிவராஜ் குமார் இந்த நேரத்தில் ஏன் அமைதியாக இருந்தார் என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது. மொத்தத்தில், கமல்ஹாசனின் இந்தக் கருத்து தென்னிந்தியாவின் மொழி உணர்வுகளை மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாக்கியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com