

சிவாஜி கணேசன் நடிப்பில் பி. ஆர். பந்தலு இயக்கத்தில் 1964-ம் ஆண்டு வெளிவந்த படம் கர்ணன். இப்படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பு இன்றைய தலைமுறையையும் ஈர்க்கும் விதமாக, உண்மையான கர்ணனை கண்முன்னே நிறுத்தும் விதமாக இருக்கும். அந்தவகையில் கர்ணன் திரைப்படம் குறித்து பலரும் அறியாத சுவாரசியமான உண்மைகள் குறித்து பார்ப்போமா?
மகாபாரதம், ராமாயணம் கதைகள் பல நூறு வருடங்களாக மக்களை வழிநடத்தி வருகின்றன என்பது நாம் அறிந்த உண்மை.
எப்படியெல்லாம் வாழ வேண்டும்; எப்படியெல்லாம் வாழக்கூடாது என அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் புராணங்கள் வெறும் எழுத்து வடிவாக மட்டுமின்றி திரை வடிவமாகவும், மக்கள் எளிதாக பார்த்து புரிந்துக்கொள்ளும் விதமாகவும் பலர் திரைப்படம் எடுக்க ஆரம்பித்தனர்.
இன்று வரை எவ்வளவு புராணங்கள் சார்ந்த படங்கள் வந்தாலும், அனைத்திற்கும் தொடக்கமாக இருப்பது என்னவோ சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் திரைப்படம் தான். இப்படத்தில் வரும் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடல் இன்றுவரை பலரது விருப்பப் பாடலாகவே இருந்து வருகிறது.
கவிஞர் கண்ணதாசன் இப்படத்திற்கு வெறும் இரண்டே நாட்களில் பாடல் வரிகளை எழுதி முடித்துவிட்டார். ஒட்டுமொத்தப் படத்தின் பாடல்களுக்கான கம்போசிங் மற்றும் ரெக்கார்டிங் வேலைகள் அனைத்தையும் விஸ்வநாதன் - ராமமூர்த்தி வெறும் மூன்று நாட்களில் மின்னல் வேகத்தில் முடித்தனர் என்று கூறினால் நம்ப முடிகிறதா?
போர்க்காட்சிகளை வெறும் செட் அமைத்து அதற்குள்ளே முடித்துவிட முடியும். ஆனால், இப்படத்தின் இயக்குநர் அவ்வளவு எளிமையாக இதனை முடிக்க விரும்பவில்லை. மகாபாரதப் போர் உண்மையில் நடந்ததாகக் கருதப்படும் ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்திரப் பகுதிக்கு ஒட்டுமொத்தப் படக்குழுவையும் அழைத்துச் சென்றார். அங்குள்ள பரந்த வெட்டவெளியில் தான் போர்க்களக் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதேபோல், சில முக்கிய அரண்மனைக் காட்சிகள் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனைகளில் எடுக்கப்பட்டன.
படத்தில் போர்க்காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட தேர்கள், சென்னையில் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டன. பின்னர், அவை அனைத்தும் தனித்தனி பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, சென்னையிலிருந்து வட இந்தியாவுக்கு சரக்கு ரயில்கள் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டு, படப்பிடிப்பு தளத்தில் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன. இவ்வளவு முயற்சிகள் எதற்கு என்று கேட்பவர்களுக்கான விடை, படத்தின் இறுதி காட்சிகளின் தரம் என்றுதான் கூற வேண்டும்.
கர்ணன் திரைப்படத்திற்காக 80 பயிற்சி யானைகள் மற்றும் 40 குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. இத்தனை விலங்குகளை சமாளிப்பத்து என்பது மிக மிக கடினமான விஷயம். இதற்காக மொத்தம் 3 கேமரா யூனிட்கள் பயன்படுத்தப்பட்டன.
இவையனைத்திற்கும் மேலாக, போர்க்களத்தில் வீரர்களாக இருந்த அனைத்து துணை நடிகர்களும் உண்மையில் துணை நடிகர்களே அல்ல, அனைவருமே இந்திய ராணுவ வீரர்கள் என்று சொன்னால் நம்ப முடிகின்றதா?. ஆம்! துணை நடிகர்களை நடிக்க வைத்தால், போர் வீரர்கள் போன்ற கம்பீரம் வராது என்று நினைத்த இயக்குநர் அப்போதைய இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று, இந்திய ராணுவத்தின் புகழ்பெற்ற '61-வது குதிரைப்படை' வீரர்களை போர்க் காட்சிகளில் நடிக்க வைத்தார். இதனால்தான் போர்க்கள ஒழுங்கு மற்றும் ஆக்ரோஷம் திரையில் தத்ரூபமாக வெளிப்பட்டது.
கர்ணன் திரைப்படம் குறித்த இத்தனை விஷயங்கள் நீங்கள் இதற்கு முன்னர் அறிந்ததுண்டா? பல வருடங்கள் சென்றும், இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் என்றால் சும்மாவா...