

சென்னையில் நடைபெற்ற மண்டாடி இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறனுக்கு நடிகர் சூரி நன்றி தெரிவித்தார்.
மதிமாறன் இயக்கத்தில் சூரி, மஹிமா நம்பியார், சுகாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மண்டாடி' செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆர்.எஸ். இன்போடைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் சூரி பேசுகையில் தான் இதுவரை வந்ததற்கும் இதற்கு மேல் போவதற்கும் காரணம் வெற்றிமாறன் தான் என்றும், அவர் போட்ட விதை தான் செடியாக முளைத்திருக்கிறது என்றும் கூறினார்.
இந்தப் படத்துக்காக பல போராட்டங்களை சந்தித்தோம் என்றும், நடுக்கடலில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது, அதன் பலனாக படம் சிறப்பாக வந்துள்ளது. இயக்குனர் தன்னிடம் 80 சதவிகிதம் படப்பிடிப்பு நீச்சல் குளத்தில் எடுத்து விடுவோம் என்றும், மீதி 20% தான் கடலில் படப்பிடிப்பு என்றார். ஆனால் இரண்டு மாதங்களாக கடலில் தான் படபிடிப்பு நடத்தப்பட்டது. வீட்டிற்கு வீடியோ காலில் தான் பேசினோம். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும் என்று கூறினார்.
"நான் எந்த உயரத்துக்குப் போனாலும் அதற்கு இயக்குனர் வெற்றிமாறன் தான் காரணம். அவர் போட்ட விதைதான் இப்போது செடியாக முளைத்திருக்கிறது" என்று நெகழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், கடல் சார்ந்த சவாலான விளையாட்டு மற்றும் சண்டைக் காட்சிகளைக் கொண்ட இந்த 'மண்டாடி' திரைப்படத்திற்காக படக்குழுவினர் வெறும் காட்சிகளுக்காக ரிஸ்க் எடுக்கவில்லை, மாறாக அந்த ரிஸ்கையே ஒரு படமாக மாற்றி இருக்கிறார்கள் என்றும் கூறினார்.
இந்நிலையில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், மேடையில் நடிகர் சூரியின் அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் வெகுவாகப் பாராட்டினார்.அப்போது பேசிய அவர், "சூரி படத்திற்குப் படம் காட்டும் உழைப்பும் முயற்சியும் வியக்க வைக்கிறது. ஆனால், சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது உடலுக்கு ஏற்படும் காயங்களைக் கவனமாகக் கையாள வேண்டும்; ரிஸ்க் எடுக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று அன்போடு அட்வைஸ் வழங்கினார்.
சினிமாவுக்காக எவ்வளவு கடினமான மற்றும் சவாலான வேலைகளைக் கொடுத்தாலும் சூரி அதைச் செய்யத் தயாராக இருப்பார். எந்த வேலையைக் கொடுத்தாலும் அதைத் தட்டாமல் ஏற்கும் மிகச் சிறந்த உழைப்பாளி சூரி என்று வெற்றிமாறன் மனதாரப் பாராட்டினார். சூரி கதையின் தேவைக்காகவும், காட்சிகளின் நிஜத்தன்மைக்காகவும் எவ்வித தயக்கமும் இன்றி ரிஸ்க் எடுத்து நடிக்கக் கூடியவர். ஆனால் அப்படி ரிஸ்க் எடுக்கும்போது உடலைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் நடிக்கும் பொழுது ஏற்படும் காயங்களை அலட்சியப்படுத்தாமல், அவற்றை மிகக் கவனமாகக் கையாள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் சூரி ஒரு நகைச்சுவை நடிகராக இருந்து, தற்போது தனக்குக் கிடைத்துள்ள இந்த முக்கிய நாயகன் அந்தஸ்தையும், தனது உழைப்பால் வந்த வளர்ச்சியையும் மிகவும் மதித்து நடக்கிறார் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தன்னுடைய வளர்ச்சியை மிகவும் மதிக்கக் கூடிய ஒரு மிகச் சிறந்த உழைப்பாளி என்று வெற்றிமாறன் அவரை மனதாரப் பாராட்டினார்.