பா.ரஞ்சித் திரைப்படத்தில் இணையும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்!

Pa.Ranjith G. V.Prakash Kumar
Pa.Ranjith G. V.Prakash Kumar

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ்:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான பா.ரஞ்சித்   சிறந்த தயாரிப்பாளராகவும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார். பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக 2018ஆம் ஆண்டு  ’பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை முதன்முதலில் தயாரித்தார். இப்படம் அவருக்கு ஒரு மிகச் சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது. விமர்சன ரீதியாகவும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதனைத் தொடர்ந்து  ‘ரைட்டர்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். அண்மையில் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் அவர் தயாரித்த ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக நீலம் புரொடக்‌ஷன்ஸின் அட்டகத்தி தினேஷ், ஊர்வசி நடித்துள்ள ‘ஜெ.பேபி’என்னும் திரைப்படம், மார்ச் 8ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

ஹீரோவாக ஜிவி.பிரகாஷ்:

ஜிவி. பிரகாஷ் சினிமாத் துறையில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும், நடிகராவும் தனது பன்முகத் திறனை ரசிகர்களுக்கு தொடர்ந்து வெளிக்காட்டி வருகிறார். என்னதான் இவரது இசைக்கு ரசிகர்கள் பலர் இருந்தாலும் கூட இவருடைய நடிப்புக்கென்றே தனி ரசிகர் கூட்டமும் உண்டு! இந்நிலையில் இவர் முதன்முறையாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஹீரோவாகவும் இசையமைப்பாளராகவும் இணைந்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஷிவானி ராஜசேகர் நடிக்கிறார். பிற முக்கியக் கதாப்பதிரங்களில் பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், விஸ்வாந்த் உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
இயக்குனர் அவதாரம் எடுத்த 16 வயதினிலே பட நடிகர்!
Pa.Ranjith G. V.Prakash Kumar

திறமைக்கான வாய்ப்பு:

 திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காத இயக்குநர்கள்  சினிமாத் துறையில் ஏராளம். அந்த வகையில்  தன்னிடம் துணை இயக்குநர்களாகப்  பணிபுரிபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக பா.ரஞ்சித் தயாரிப்பாளர் அவதாரத்தில் களமிறங்கினார். இந்த முறையும் தன்னுடைய உதவி இயக்குநரான அகிரன் மோசஸ் என்பவரின் படத்தை தான் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கிய நிலையில் படப்பிடிப்பை நேரில் வந்து துவக்கி வைத்த பா.ரஞ்சித், படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து கூறினார். ரூபேஷ் சாஜி ஒளிப்பதிவில், செல்வா RK இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெயரிடப்படாத இந்தப் படம் இன்னும் சில மாதங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com