தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தனுஷ், தன்னைச் சுற்றி பரவி வரும் பல்வேறு வதந்திகள் மற்றும் எதிர்மறைப் பிரச்சாரங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற 'குபேரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், தனது ரசிகர்கள் வெறும் ரசிகர்கள் அல்ல, அவர்கள் தனது வாழ்க்கை துணைகள் என்றும், எந்த ஒரு வதந்தியாலும் தன்னை அசைக்க முடியாது என்றும் ஆவேசமாக தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு செய்திகளும், வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக, முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடனான விவாகரத்துக்குப் பிறகு, அவரது திருமணம் மற்றும் பிற உறவுகள் குறித்து பல யூகங்கள் கிளம்பின. இதற்கு இடையே நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் இடையே ஒரு பிரச்னை வெடித்தது. இது போன்ற சூழலில், தனுஷின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
விழாவில் உணர்ச்சிவசப்பட்ட தனுஷ் பேசியதாவது: "இருட்டில் ஒரு பாதை தேடி நடக்கும்போது, மேலிருந்து ஒரு கை என் கையைப் பிடித்து வழிநடத்துகிறது. அந்த தருணத்தில், எனது ஒவ்வொரு ரசிகரும் ஒரு டார்ச் லைட்டாக மாறி எனக்கு வழிகாட்டுகிறார்கள். என் பற்றி எவ்வளவு வதந்திகள் வேண்டுமானாலும் பரப்புங்கள். எவ்வளவு எதிர்மறைப் பிரச்சாரங்கள் வேண்டுமானாலும் செய்யுங்கள். ஒவ்வொரு முறையும், என் படம் வெளியாவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, எதிர்மறைப் பிரச்சாரத்தைத் தொடங்கி அதை பரப்புங்கள்."
"சில வதந்திகளைப் பரப்பி என்னை முடித்துவிடலாம் என்று நினைத்தால், அதைவிட முட்டாள்தனமான ஒன்று இருக்க முடியாது. நீங்கள் ஒரு செங்கல்லை கூட அசைக்க முடியாது. உங்கள் எண்ணங்கள் தான் நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதை தீர்மானிக்கும்" என்று தனுஷ் கர்ஜித்தார்.
தனுஷின் இந்த பேச்சு, திரையுலகினர் மத்தியிலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது ரசிகர்களை தனது வாழ்வில் உடன் பயணிக்கும் "வாழ்க்கை துணைகள்" என்று அவர் குறிப்பிட்டது, அவரது ரசிகர்கள் மீதுள்ள அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. இந்த கருத்துக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுகிறது.