

பிரபல டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி இணைந்து நடித்துள்ள படம் பரிமளா அண்ட் கோ (Parimala And Co). இந்த படத்தில் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இரண்டு மகள்கள், மனைவி என்று பட்டினப்பாக்கம் பகுதியில் வாழ்ந்து வருகிறார் ஜெயராம். இவரது ஒரு மகளான அனந்திகாவை அப்பகுதியில் தாதாவாக இருக்கும் மாஸ்டர் சாண்டி ஒரு தலையாக காதலிக்கிறார். அனந்திகா பலமுறை எச்சரித்தும் சாண்டி கேட்கவில்லை தொடர்ந்து பின்தொடர்கிறார். ஜெயராமும் அறிவுரை சொல்லியும் செவிமடுக்கவில்லை. சாண்டிக்கும் ஜெயராம் குடும்பத்திற்கும் பிரச்சனை வருகிறது இந்த சூழ்நிலையில் ஒரு நாள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் சாண்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார் இந்த கொலையை செய்தது யார்? என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் மிஷ்கின் துப்பறிகிறார். மிஸ்கினுக்கு ஜெயராம் குடும்பத்தினர் மீது சந்தேகம் வருகிறது ஒரு நாள் ஜெயராம் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான பாலக்காட்டிற்கு சென்று விடுகிறார். மிஸ்கினுக்கு ஜெயராம் மீது இன்னும் சந்தேகம் வலுக்கிறது. ஜெயராம் பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தாரா? மிஷ்கின் அவரை கைது செய்தாரா என்று சொல்கிறது இந்த கதை.
படம் தொடங்கும் போது இது ஒரு நல்ல நடுத்தர குடும்ப பின்னணியில் சொல்லப்பட்ட ஒரு காமெடி கதை என்று நினைக்கத் தோன்றியது சாண்டி மரணத்திற்கு பிறகு இந்த படம் காமெடி திரில்லர் மூவி என்றும் யோசிக்க தோன்றுகிறது. இந்த இரண்டு அம்சங்களும் இந்த படத்தில் இருந்தும் இந்தப் படம் சரியான கதையை நோக்கி நகராததால் டைரக்டர் பாண்டிராஜ் தான் சொன்னதை முழுமையாக சொல்ல முடியவில்லை.
ஊர்வசி, ஜெயராம் இணைந்து மலையாளத்தில் பல முன்னணி வெற்றி படங்களில் நடித்தவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து தமிழில் நடிக்கும் போது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது இந்த எதிர்பார்ப்பை பாண்டிராஜ் சரியாக பயன்படுத்தவில்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது.
சாண்டி கொலைக்கு பிறகு படம் வேகம் எடுக்கும் என்று நாம் நம்பினால் மாறாக நகைச்சுவை என்ற பெயரில் கதை ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வருகிறது. மேலும் நம் சினிமாவில் பல இயக்குனர்கள் வடசென்னை பகுதி வாழ் மக்களை குற்றப் பின்னணி உள்ளவர்களை போல தான் காட்டியுள்ளார்கள். தேசிய விருது பெற்ற டைரக்டர் பாண்டிராஜ் கூட இந்தப் படத்தில் வடசென்னை காரர்களை குற்ற பின்னணி உள்ளவர்களாகத்தான் காட்டுகிறார். பாண்டிராஜ் இதை தவிர்த்து இருக்கலாம்.
படத்தில் ஒளிப்பதிவு சிறப்பாக வந்திருக்கிறது ஆனால் எடிட்டிங் நம்மை ஏமாற்றி விடுகிறது. படத்தில் நாம் பாராட்டப்பட வேண்டிய விஷயம் ஊர்வசி மற்றும் ஜெயராமின் நடிப்புதான் மனைவியோடு சண்டை போட்டுவிட்டு பிறகு சரணடையும் இடத்தில் ஜெயராம் ஒரு நடுத்தர குடும்ப கணவரை கண் முன் கொண்டு வருகிறார்.
ஊர்வசி பற்றி நாம் சொல்லவே வேண்டாம் இரண்டு பெண்களுக்கு அம்மாவாக, நமது வீட்டு பெண்மணிகள் தனது ஆதங்கத்தை எல்லாம் மனதில் எப்படி கொட்டி விடுவார்களோ அதே போல பல காட்சிகளில் அப்படியே கொட்டி விடுகிறார் ஊர்வசி. ஜெயராமின் உறவினர்களை கிண்டல் செய்யும்போது ஊர்வசி தனக்கே ஆன பாணியில் தூள் கிளப்பி இருக்கிறார்.
இரண்டு பெண்களில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நன்றாக நடித்திருக்கிறார். பெண்களுக்கு தைரியம் முக்கியம் என்பதை தனது நடிப்பின் மூலம் காட்டியிருக்கிறார். தைரியம் அசால்ட் தனம் இரண்டையும் கலந்து சஞ்சனா நன்றாக நடித்து இருக்கிறார். இரண்டாவது பெண்ணாக நடிக்கும் அனந்திகா ஓரளவு சுமாராக நடித்திருக்கிறார்.
மிஷ்கின் நன்றாக நடித்திருந்தாலும் இவரின் நடிப்பு சற்று நாடகத் தன்மையாக இருக்கிறது.
பிடிக்காத பெண்ணை காதலிக்க வற்புறுத்தும் போது நமக்கே சாண்டி மீது கோபம் வருகிறது. அந்த அளவிற்கு சாண்டி மாஸ்டரின் நடிப்பில் எதார்த்தம் இருக்கிறது.
ஹவுஸ் ஓனராக வரும் யோகி பாபு அதிகம் இல்லை என்றாலும் சிறிது சிரிக்க வைக்கிறார்.
படத்தின் பாடல்களை விடை பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது.
பாண்டிராஜ் இயக்கம், ஜெயராம் - ஊர்வசி ஜோடி போன்ற போன்ற இரண்டு எதிர்பார்ப்புகளுடன் இந்த படத்திற்கு சென்றால் ஊர்வசி ஜெயராம் நடிப்பு ஒன்று மட்டுமே நமக்கு ஆறுதல் தருகிறது. இவர்களின் நடிப்பை ரசிப்பவர்களுக்கு இந்த பரிமளா அண்ட் கோ (Parimala And Co) கண்டிப்பாக பிடிக்கும்.