
சமூக வலைதளங்களில் 30 லட்சம் பேரை 'பிளாக்' செய்துள்ளதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளார் பிரபல தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ்.
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது கலைப்பயணத்தை ஆரம்பித்து, தெலுங்கு சினிமா உலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி இன்று திரையுலகிலும், சின்னத்திரையிலும் சம கால நடிகைகளுக்கு போட்டியாக, வலம் வருபவர் தான் நடிகை அனசுயா பரத்வாஜ்.
எம்பிஏ பட்டம் பெற்ற இவர் ஜபர்தஸ்த் என்ற நகைச்சுவை நிகழ்ச்சி தான் இவரது வாழ்க்கையை மாற்றியது என்றே சொல்லலாம். 2016-ம் ஆண்டில், நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக சொக்கடே சின்னி நயனா என்ற படத்தில் நடித்த இவர், அதனை தொடர்ந்து க்ஷணம் என்ற படத்தில் எதிர்மறையான வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
‘புஷ்பா’, ‘புஷ்பா 2’, ‘ரங்கஸ்தலம்’ போன்ற படங்களில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்த இவர், தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து, ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான போதிலும், அழகிலும், தன்னம்பிக்கையிலும் எந்த நாயகிக்கும் தான் குறைந்தவர் இல்லை என்பதை நிரூபித்து வரும் அனசுயா பரத்வாஜ், தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமல்லாமல், தமிழ், மலையாளம் போன்ற மற்ற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் சில வலைதளத் தொடர்களிலும் நடித்ததின் மூலம் மேலும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அனசுயாவை ரசிகர் ஒருவர் ஆன்டி என்று அழைத்தால் கோபமடைந்த அவர், அந்த ரசிகரை கடுமையாக திட்டி எச்சரித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னை பற்றி சமூகவலைதளங்களில் வரும் ட்ரோல்கள் குறித்து அவர் கூறிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தனது எதிர்மறையான விமர்சனங்கள் குறித்த நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அதில், ‘சமூக வலைத்தளங்களில் யாராவது என்னைப் பற்றி எதிர்மறையாக பேசினால், அவர்களை நான் உடனடியாக பிளாக் செய்து விடுவேன். இதுவரை சுமார் 30 லட்சம் பேரை பிளாக் செய்துள்ளேன். இது மட்டுமின்றி பலருக்கு கடுமையான பதிலடியும் கொடுத்து உள்ளேன். சமூக வலைதளங்களில் எதையும் தவறாகப் புரிந்து கொண்டு விமர்சனம் செய்யும் இவர்கள் மனநலத்திற்கு ஆபத்தானவர்கள். எனவே இவர்களை நான் எதையும் சொல்லாமல் நேரடியாக பிளாக் செய்துவிடுகிறேன்’ என்று கூறியுள்ளார்.
அனுசுயாவின் இந்த பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. அனுசுயாவின் இந்த கருத்துக்கு பெண்களும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் மற்றும் தவறான கருத்துகளால் பாதிக்கப்படுபவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.