ஒரு படத்தால் மொத்த வாழ்க்கையும் மாறியது! ரஜினியை உச்ச நட்சத்திரமாக்கிய அந்த திரைப்படம் எது தெரியுமா?

Actor Rajinikanth
Actor Rajinikanth
Published on

தென்னிந்தியாவில் மட்டுமல்ல இந்தியா தாண்டி ஜப்பான் போன்ற வெளிநாடு வாழ் மக்களையும் காந்தமாக தன் பக்கம் கவரும் ஆற்றல் உள்ள ஒரே நட்சத்திரமாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சுவீகரித்து தனது மைந்தனாக மாற்றியதற்காக பெருமைப்படுகிறது நமது தமிழ்த் திரையுலகம்.

'அழகு... நீ நடந்தால் நடையழகு... நீ சிரித்தால் சிரிப்பழகு... நீ ஒருவன்தான் அழகு...' பாட்ஷா படத்தில் வரும் இந்தப் பாடல் இவருக்காகவே எழுதப்பட்டிருந்தாலும் அதுதான் உண்மையும் கூட. இளமையில் இவரது ஸ்டைலில் மயங்கிய மக்கள் 70 வயதைத் தொட்டாலும் இவரது சிறிய கண்களில் இருக்கும் கவர்ச்சி மற்றும் நிதானமான பேச்சுக்கு இன்னும் மயங்கியே இருப்பது எந்த நடிகருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம்.

இந்த அதிர்ஷ்டத்தின் பின் உள்ள ரஜினியின் அசாத்திய உழைப்பு மற்றும் திரை பயணம் குறித்து இங்கு பாப்போம்...

ரஜினியின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் திரைத்துறை வாழ்க்கை

சினிமா உலகில் நுழைவதற்கு முன்பு, ரஜினிகாந்த் பெங்களூரில் ஒரு பேருந்து நடத்துனராக பணியாற்றினாலும் நடிப்பின் மீதான ஆர்வத்தில் 1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றார். தொடர்ந்து தனது எளிமையான பின்னணியுடன் 1970களின் பிற்பகுதியில் சிறிய வேடங்களுடன் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி கே. பாலசந்தரின் 1975 ஆம் ஆண்டு தமிழ் நாடகமான 'அபூர்வ ராகங்கள்' இல் அறிமுகமானார்.

அவரது சகமனிதர் போன்ற இயல்பு ரசிகர்களை அதிகம் ஈர்த்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் அவரை தங்கள் சொந்தங்களில் ஒருவராகவே அன்புடன் வரவேற்றனர்.

ரஜினிகாந்த் தனது கை அசைப்பு சைகைகள் மூலமும், கண்ணாடியை ஸ்டைலாக தூக்கிப் போட்டு அணிவது கவர்ச்சிகரமான கதாபாத்திரங்கள், அதற்கேற்ப வித்யாச ஒப்பனைகள் உதடுகளை மெதுவாக அசைத்து அடித்தொண்டையில் பேசிய நுட்பமான உரையாடல் என சினிமாவில் முற்றிலும் புதிய பாணியை உருவாக்கி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என வயது வித்யாசமின்றி அனைவரையும் மகிழ்வித்தார்.

அபூர்வ ராகங்களில் அவரது முதல் அறிமுகமே பார்வையாளர்களுக்கு ஒரு ஸ்டைலிஸ்டு ஆளுமையின் தொடக்கத்தைக் குறித்தது. இந்த தனித்துவமான பண்புகள் அவரை தனித்து நிற்கவும் மொழித் தடைகளைத் தாண்டி இணைக்கவும் உதவியது, மேலும் தமிழ் படங்களில் வலுவான இடத்தைப் பெற உதவியது.

குறிப்பாக தமிழ் அவரது தாய்மொழி இல்லையென்றாலும், அதை முழுமையாக்க ரஜினிகாந்த் கடுமையாக உழைத்தார். அவரது தனித்துவமான குரல், சக்திவாய்ந்த நடிப்பு மற்றும் மாடுலேஷனுடன் வசன உச்சரிப்பில் துல்லியமான நேரம் ஆகியவை எளிமையான வசனங்களைக் கூட மறக்க முடியாத தருணங்களாக மாற்றியது.

தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், மற்றும் வங்காளம் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகராக மாறுவதற்கு முன்பு ரஜினி தனக்கு கிடைத்த வில்லன் மற்றும் துணை வேடங்களில் நடித்ததன் மூலம் தனது திரைத்துறை வாழ்க்கையை துவங்கியது குறிப்பிடத்தக்கது.

திருப்புமுனை மற்றும் நட்சத்திர அந்தஸ்து உயர்வுக்கு வழிவகுத்த படங்கள்...

ரஜினிகாந்தின் திரைப்பட வாழ்வின் திருப்புமுனையாக 'பில்லா' (1980) கருதப்படுகிறது. இது இந்தி திரைப்படமான 'டான்' இன் ரீமேக் மூலம் தமிழில் எடுக்கப்பட்ட இந்த படம் அவரை தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகவும் அதிரடி நாயகனாகவும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தது. தொடர்ந்து அவர் 'மூன்று முகம்' (1982) படத்தில் மூன்று வேடங்களில் வித்யாசம் காட்டி நடித்து பட்டையைக் கிளப்பினார். இது அவருக்கு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளில் சிறப்பு பரிசைப் பெற்றுத் தந்தது.

அவரது குறிப்பிடத்தக்க படங்களில் நிறைய இருந்தாலும் அவற்றில் சில...

அவரது திரை வாழ்க்கையை ஒரு தீர்க்கமான தருணமாக மாற்றிய ஒரு அதிரடி கேங்ஸ்டர் படமான 'பாட்ஷா' (1995), அவரது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை உறுதிப்படுத்திய வணிக வெற்றி படமாக அமைந்த 'முத்து' (1995) , அவரது பன்முகத்திறனை வெளிப்படுத்தி எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த இந்திய படங்களில் ஒன்றாக மாறிய அறிவியல் புனைகதை படமான 'எந்திரன்' (2010), 100 கோடி வசூல் கிளப்பில் நுழைந்து ஒரு முன்னணி நடிகராக அதிக வசூல் ரீதியாக அவரது நிலையை உறுதிப்படுத்திய படம் 'சிவாஜி' (2007) , ரூபாய் 600 கோடிக்கு மேல் சம்பாதித்த பிளாக்பஸ்டர் படமான 'ஜெயிலர்' (2023) இப்படி பல படங்கள் அவரது திரை வாழ்க்கையில் தொடர்ந்து திருப்புமுனை தந்து வருகிறது.

விருதுகள்

தனது வாழ்க்கை முழுவதும், ரஜினிகாந்த் இந்திய சினிமாவுக்கு அவர் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்து பத்ம பூஷண், பத்ம விபூஷண் மற்றும் தாதாசாகேப் பால்கே விருது உட்பட ஏராளமான பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இதையெல்லாம் தாண்டி நல்ல அன்பான மனிதர் எனும் நற்பெயரை ரசிகர்களின் விருதாக ஏற்றுள்ளார். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டுள்ளார்.

புதிய தகவல்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் ரசிகர்களின் தீவிர எதிர்பார்ப்புடன் வரும் ஆகஸ்ட் மாதம் 14-ல் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், தனியார் ஊடகத்துக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில் அவரது சுயசரிதையை எழுதுவதில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்திருந்தார். இது ரசிகர்கள் இடையில் ரஜினிகாந்த் குறித்த சுவாரஸ்யங்களை அறியும் ஆவலை தூண்டியுள்ளது என்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com