

நடிகர் ரவிமோகன்(ஜெயம் ரவி) 20 ஆண்டுகளுக்கு மேலாக , தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் என்ற வெற்றி திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான அவர் , பராசக்தி திரைப்படத்தின் மூலமாக வில்லனாகவும் நடித்தார். பொங்கலுக்கு வெளியாகி இருந்த 'பராசக்தி' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ரவி மோகனின் சிறப்பான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
சமீபத்தில் 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற சொந்தபடத் தயாரிப்பு நிறுவனத்தை ரவி மோகன் தொடங்கியிருந்தார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் , தொடக்க கட்டமாக 3 திரைப்படங்களை அவர் தயாரிக்கிறார். அதில் ஒரு திரைப்படத்தை அவரே இயக்குகிறார். ஜெயம் ரவி இயக்குனராக அறிமுகமாகவும் முதல் படத்தின் கதாநாயகனாக நடிக்க இருப்பது நகைச்சுவை நடிகர் யோகி பாபு தான். யோகி பாபு நகைச்சுவை நடிகராக சில திரைப்படங்களிலும் , சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு 'ஆன் ஆர்டினரி மேன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு (மார்ச் 5) அதிகாலையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜையின் போது ரவி மோகன், யோகி பாபு மற்றும் பாடகி கெனிஷா ஆகியோர் கலந்து கொண்டனர். அன் ஆர்டினரி மேன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது குறித்து யோகிபாபு மகிழ்ச்சியுடன் "எனது ஹீரோ ரவி மோகன் சார் இயக்குநராக அறிமுகமாகும், முதல் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்குகிறது" என்று தெரிவித்திருந்தார்.
ரவி மோகன் மற்றும் யோகி பாபுவின் இடையே ஆழமான நட்பு கோமாளி படத்தில் இருந்து தொடங்கியிருந்தது. அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போது ரவி மோகன் , யோகி பாபுவை வைத்து எதிர்காலத்தில் படம் எடுக்க உள்ளதாக பேசியிருந்தார். அப்போது கொடுத்த வாக்கை காப்பாற்றும் வகையில் 6 ஆண்டுகள் கழித்து ரவி மோகன் இயக்கும் திரைப்படத்தில், யோகி பாபுவிற்கு கதாநாயகன் வேடத்தை அளித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் இணையும் மற்ற நடிகர் , நடிகைகள் மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்களை பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த திரைப்படத்தில் கெனிஷா ஒரு பாடகியாக ஒப்பந்தமாகியுள்ளார். அது மட்டுமல்லாமல் படத்தின் பின்னணி இசையமைப்பாளராகவும் பணிபுரிய உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின்னர் ரவிமோகன் , அடுத்தடுத்து தனது கதாபாத்திரத்தை வித்தியாசமானதாக தேர்வு செய்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக பராசக்தி திரைப்படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்திருந்தார். பிறகு தயாரிப்பாளர், இயக்குனர் என்று வெவ்வேறு பணிகளை தேர்ந்தெடுத்துள்ளார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 'ப்ரோ கோட்' (Bro Code) என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் அவர் கதாநாயகனாக நடிக்கும் 'ஜெனி' மற்றும் 'கராத்தே பாபு' ஆகிய திரைப்படங்களும் விரைவில் வெளியாக உள்ளன. நடிகராக இருந்து இயக்குனராக மாறும் ரவி மோகனின் திரைப்படம் பற்றிய அடுத்த கட்ட தகவல்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.