

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இடத்தை நிரப்ப இன்றளவும் யாரும் இல்லை என்றே சொல்லலாம். இசை ஜாம்பவானாக பல சகாப்தங்களாக இந்த இடத்தை தக்கவைத்து வருகிறார். இவரின் பாடல்களுக்கு அன்றைய கால நபர்கள் முதல் இன்றைய கால 2k கிட்ஸ் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பல இசையமைப்பாளர்கள் இசையை உருவாக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும், இசையை எழுதி, அதை இசைக் கலைஞர்கலைஞர்களை வாசிக்க வைத்து, அந்த இசையைக் கோர்த்து, அதனை பாடல்களுக்கும் படங்களுக்கும் பின்னணி இசையாக சேர்த்து வருகிறார். 80 வயதைக் கடந்த பின்னரும் தொடர்ந்து இசையமைத்துக் கொண்டும், சிம்பொனி எழுதிக் கொண்டும் ஒரு இளைஞனைப் போல இசையுலகில் சரித்திரம் படக்கும் ஆர்வத்தை கைவிடாமல் இருக்கிறார்.
இந்த நிலையில், இளையராஜா தனது சொந்தப் பாடல்களையே பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள செய்தி, இசை உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
சமீப காலமாகவே இளையராஜா, மஞ்சுமல் பாய்ஸ், குட்பேட் அக்லி, டியூட் உள்ளிட்ட படங்களில் பயன்படுத்தபட்ட பாடல்களுக்கு தடைவிதித்து நோட்டீஸ் அனுப்பி நஷ்ட ஈடு கேட்டுவந்தார். ஆனால் தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அவரது பாடல்களையே பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் பல நிறுவனங்களுக்குத் தனது இசை உரிமத்தை ஒப்பந்த அடிப்படையில் வழங்கியிருந்தார். இதில் ‘சரிகம’ நிறுவனம், குறிப்பிட்ட 134 படங்களின் பாடல்களுக்கான முழுமையான மற்றும் பிரத்யேக உரிமம் தங்களிடம் இருப்பதாகக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த 134 படங்களின் பாடல்களை இளையராஜா மற்ற இசை ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு விற்பனை செய்தது ஒப்பந்த மீறல் என்பது சரிகம நிறுவனத்தின் வாதம்.
குறிப்பிட்ட அந்த 134 திரைப்படங்களின் பாடல்களை இளையராஜா தனது சொந்தச் சொத்து எனக் கூறி அமேசான் மியூசிக் (Amazon Music), ஐடியூன்ஸ் (iTunes) மற்றும் ஜியோசாவ்ன் (JioSaavn) போன்ற முன்னணி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு வழங்கியுள்ளார். ஆனால், அந்தப் பாடல்களுக்கான முழுமையான மற்றும் பிரத்யேக உரிமம் தங்களிடம் இருக்கும்போது, இளையராஜா இவ்வாறு செய்தது சட்டவிரோதமானது என்றும், இது தங்களது வணிக ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் 'சரிகம' நிறுவனம் நீதிமன்றத்தில் வாதிட்டது."
வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அந்த குறிப்பிட்ட 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.பொதுவாக இசை உரிம ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முடிவுக்கு வரும். ஆனால், சில ஒப்பந்தங்கள் "நிரந்தர உரிமை" அடிப்படையில் கையெழுத்தாகியிருக்கலாம் என்பதே இங்குள்ள சட்டச் சிக்கலாக அமைந்துள்ளது.
எக்கோ, பிரசாத் லேப் என ஏற்கனவே பல சட்டப் போராட்டங்களை அவர் சந்தித்துள்ளார். அதை போன்று இந்த சிக்கலையும் தகர்த்து எறிவாரா என்று பார்க்கலாம்.