

தமிழ்நாட்டில் நிலமற்ற ஏழை எளிய எஸ்சி - எஸ்டி பிரிவினருக்கு வீட்டு மனை வழங்கும் நோக்கத்தோடு, இலவச வீட்டு மனை பட்டா திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி கிராமப்புற மக்களுக்கு 3 சென்ட் நிலமும், நகராட்சி மற்றும் பேரூராட்சி மக்களுக்கு 1.5 சென்ட் நிலமும், மாநகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு 1 சென்ட் நிலமும் வீடு கட்ட வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் எண்ணற்ற பொதுமக்கள் பயன்பெற்று வரும் நிலையில், தற்போது பொதுமக்கள் மத்தியில் ஒரு முக்கிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இலவச வீட்டு மனை பட்டா திட்டத்தின் கீழ் பட்டா மட்டுமே வழங்கப்படுவதாகவும், நிலம் தங்களுக்கு ஒதுக்கப்படுவதில்லை எனவும் பொதுமக்கள் ஆதங்கத்துடன் தங்களது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
சொந்த வீடு இல்லாமல், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் குறைந்தது 10 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு, 1 முதல் 3 சென்ட் வரை வீட்டு மனை பட்டா இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தகுதியானவ நபர்கள் குடும்ப அட்டை, ஆதார் கார்டு மற்றும் வருமானச் சான்றுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
நிலமற்ற ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதோடு, நிலம் வழங்கப்படும் இடங்களில் அரசு சார்பில் அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.
இதன்படி அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பட்டா வழங்கப்படும் இடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சாலை வசதி மற்றும் இரவு நேர மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.200 கோடியை ஒதுக்குகிறது தமிழக அரசு.
இந்நிலையில் வீடு கட்ட நிலம் வழங்குவதற்கு பட்டா மட்டுமே வழங்கப்படுவதாகவும், நிலத்தை ஒதுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சிவகங்கை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நரிக்குறவர், அருந்ததியினர் மற்றும் எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 1,000-க்கும் மேற்பட்ட பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கான நிலம் இதுவரை ஒதுக்கப்படவில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்
இலவச வீட்டு மனை பட்டா திட்டத்தின் கீழ் சிவகங்கையில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கப்பட்ட பிறகு, அந்த இடத்தை பயனாளிகளுக்கு ஒதுக்காமல், மாற்று இடம் ஒதுக்குவதாக கூறி வேறு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாற்று இடமும் தற்போது வரை ஒதுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டிய நிலையில், வேறொரு இடத்தைப் பார்த்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சிவகங்கையில் 3,000-க்கும் மேற்பட்டோருக்கு பட்டா கிடைத்தும், நிலம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இலவச வீட்டு மனை பட்டா திட்டத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினைக்கு, தமிழக அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.