விமர்சனம்: சைரன்!
இது சத்தம் மட்டுமல்ல எமோஷன்(3 / 5)
ஸ்ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி உள்ள படம் சைரன். அந்தோணி பாக்கியராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
சிறையில் உள்ள திலகன் என்ற கைதி தன் மகளைப் பார்க்கும் ஆசையில் பரோல் பெற்று தன் சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு வருகிறார். மகளோ தன் அப்பாவை வெறுக்கிறார். இந்த சூழ்நிலையில் ஊருக்குள் திலகன் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு கொலை விழுகிறது. இந்த கொலைகளுக்கும், திலகனுக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்த கொலைகள் நடக்கின்றன என்று பயணிக்கிறது சைரன்.
படத்தின் முதல் பாதி வேகமாகவும், பரபரப்புடனும் நகர்கிறது. இரண்டாம் பாதியில் எமோஷன்ஸ் ஆளுமை செய்கிறது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர், ஆணவ படுகொலை, சிறைக் கைதிகளின் ஏக்கம் எனப் பல இடங்களைத் தொட்டுள்ளார் அந்தோணி பாக்கியராஜ். கொஞ்சம் பிசகினாலும் குழப்பம் வரும் திரைக்கதையில் கோபனின் படத்தொகுப்பு அதை தவிர்த்து விடுகிறது.
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையை விடப் பாடல்களே சிறப்பாக உள்ளன. செல்வகுமாரின் ஒளிப்பதிவில் காஞ்சிபுர நகர வீதிகள் கதை சொல்வது போல் அமைந்துள்ளது.
மகள் மீது அன்பு, மனைவி மீது காதல், சண்டை எனப் பல இடங்களில் நின்று ஸ்கோர் செய்கிறார் ஜெயம் ரவி. ஜெயம் ரவியின் நடிப்பில் சைரன் ஒரு பெயர்ச் சொல்லும் படமாக இருக்கும். போலீஸ் அதிகாரியாக வரும் கீர்த்தி சுரேஷ் இன்னும் நடிப்பில் சோபித்திருக்கலாம்.
சில லாஜிக் மீறல்களைப் பொறுத்துக் கொண்டால் அப்பா-மகள் செண்டிமெண்ட்டிற்காக சைரன் படம் உங்களுக்குப் பிடிக்கலாம்.
சைரன் படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் தாண்டி இன்னும் சில கதாபாத்திரங்கள் திரும்பி பார்க்க வைக்கிறார்கள். வாய் பேச முடியாத பெண்ணாக அனுபமா பரமேஸ்வரன் ஒரு அழகான நடிப்பை தந்துள்ளார். அழகம் பெருமாள் பெரிய மீசையுடன் வந்து நாம் கேள்விப்படும் பல ஜாதி அரசியல் தலைவர்களை கண் முன் நிறுத்துகிறார். எப்போதும் தான் நடிக்கும் படங்களில் அறிவுரைகளை அள்ளித் தரும் சமுத்திரக்கனி இப்படித்தில், காக்கி சாட்டைக்குள் ஜா'தீ' புகுந்து விட்டால் எத்தனை ஆட்டம் போடுவார்கள் என்பதை ஒரு காவல் துறை உயர் அதிகாரியாக நடித்து சபாஷ் போட வைக்கிறார்.
யோகிபாபுவை வைத்து செய்யும் உருவ கேலியை தவிர்திருக்கலாம். சிறையில் இருக்கும் வாய் பேச முடியாத குற்றவாளிகள் படத்தில் முதல் காட்சியில் செய்யப்படும் மாறுபட்ட கொலை என ரசிகர்களை ஆச்சரிய படுத்தும் சில விஷயங்கள் படத்தில் உள்ளன.
அரசியல்வர்கமும், அதிகாரவர்கமும் எப்படி ஜாதியை காப்பாற்றுகிறது என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விடுகிறார் டைரக்டர். தமிழ் நாட்டில் நடக்கும் ஆணவ கொலைகளுக்கு பின் இருக்கும் அரசியல்-அதிகார தொடர்பை சொல்கிறது சைரன்.
திரில்லர், செண்டிமெண்ட், ஆக்ஷன் என மூன்றும் கலந்து ஒரு நல்ல கமர்சியல் அனுபவத்தை தருகிறது இப்படம்.