

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளான சாந்தி இன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானர். அவருக்கு வயது 71. நடிகர் திலகத்தின் வீட்டில் நடைபெற்ற இந்த சோக சம்பவம் அவரது குடும்பத்திலும் , தமிழ் சினிமா வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாந்தியின் மறைவிற்கு தமிழ் சினிமாவைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் , அரசியல்வாதிகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் சிவக்குமார் , நாசர் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் முக. ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் நேரில் சென்று சிவாஜி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் மு.க.ஸ்டாலின், “தனது தந்தை கலைஞரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்கள். காலத்தால் அழியாத அவர்களது நட்பின் பாசம், இரு குடும்பங்களையும் தலைமுறைகள் தாண்டி பிணைத்திருக்கிறது. அந்தப் பாசப் பிணைப்பில் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே, அன்பு பாராட்டி வந்த சகோதரி சாந்தியின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவிக்கிறேன்," என்று இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இந்திய சினிமாவின் நடிப்பிற்கு இலக்கணமாக போற்றப்படுபவர். தமிழகம் மட்டுமின்றி அவரது நடிப்பிற்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். அப்போதைய காலகட்ட பல வெளிநாட்டு தலைவர்களும் , ஹாலிவுட் நடிகர்களும் இவரது நடிப்பிற்கு ரசிகர்களாக இருந்தனர். நடிகராக மட்டுமின்றி ஒரு அரசியல்வாதியாகவும் , சமூக சேவகரராகவும் சிவாஜி கணேசன் ஏராளமான நற்பணிகளை செய்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.
சிவாஜி கணேசனுக்கு ராம்குமார் , பிரபு , சாந்தி , தேன் மொழி , என்கிற மகன்களும் மகள்களும் இருந்தனர். இதில் சாந்தி சிவாஜியின் மூத்த மகள் என்பதால் , அவர் மீது அளவற்ற அன்பினை கொண்டிருந்தார். இதன் காரணமாக அவரது சில சொத்துக்களுக்கு தன் மகளான சாந்தியின் பெயரை சூட்டி இருக்கிறார். அவர் சென்னையில் பிரமாண்டமாக கட்டியிருந்த, தமிழ்நாட்டின் முதல் ஏசி (குளிரூட்டப்பட்ட) திரையரங்கத்திற்கு சாந்தி பெயரைத் தான் சூட்டி இருந்தார்.
அது போல தஞ்சையில் அவர் கட்டிய திரையரங்குகளுக்கு சாந்தி , கமலா (சிவாஜியின் மனைவி) என்று பெயர் சூட்டி இருந்தார். மேலும் தனது தங்கப்பதக்கம் திரைப்படத்திற்கு சாந்தியை தயாரிப்பாளராக்கியும் மகிழ்ந்துள்ளார். அந்த காலத்தில் மிகவும் பிரம்மாண்டமாக சென்னையே ஸ்தம்பிக்கும் அளவிற்கு தன் மகள் சாந்திக்கும் நாராயணசாமிக்கும் சிவாஜி திருமணம் செய்து வைத்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னரும் தன் கணவருடன் சிவாஜியின் அன்னை வீட்டில் , தான் சகோதர சகோதரிகளுடன் சாந்தி வசித்து வந்தார். இந்நிலையில் கடந்து சில வருடங்களாக உடல்நலக் குறைபாடு காரணமாக, சாந்தி அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சமீபத்தில் உடல்நலம் மோசமானதை தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தார். ஆயினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். அன்னை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு உறவினர்களும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.