
தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் மக்கள் அனைவராலும் கொண்டாடும் நடிகராகவும், முன்னனி நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியான ‘அமரன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
தமிழ் சினிமாவில் நுழைந்து 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்ட நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், இப்போது 100 கோடி வசூல் கொடுத்த நாயகனாகவும் மாறிவிட்டார். பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘மதராஸி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் ஏ.ஆர். முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் ‘மதராஸி’ என்றும் இந்தியில் ‘தில் மதராஸி’ என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் 23-வது படமான 'மதராஸி' தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா அளவில் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்கிறார். துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த வித்யூத் ஜாம்வால் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மற்றும் இவர்களுடன், விக்ராந்த், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் 'மதராஸி' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, அந்த படத்தை பிரபல நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ.23 கோடி கொடுத்து ஓடிடி உரிமையை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி சுமார் 28 நாட்களுக்குப் பிறகு நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.