

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக அதிவேகமாக வளர்ந்தவர் ஸ்ரீ லீலா. தற்போது தெலுங்கின் முன்னணி நடிகையாக இருக்கும் அவர் , தவறவிட்ட சில திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதும் அது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஶ்ரீ லீலா , 'பெல்லி சண்டாடி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அவரது முதல் திரைப்படம் ஓரளவிற்கு நன்றாக ஓடினாலும் , ஶ்ரீ லீலாவின் நடன அசைவுகள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடித்து வந்தவர் , 'பகவந்த் கேசரி' திரைப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் நடித்து பெயர் பெற்றார். மகேஷ்பாபுவுடன் 'குண்டூர் காரம்’ திரைப்படத்தில் நடித்து மேலும் அதிக புகழைப் பெற்றார். இந்த திரைப்படத்தில் இவர் ஆடிய நடனத்திற்கு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியது. அதைத் தொடர்ந்து தெலுங்கின் முன்னணி கதாநாயகியாகயாக வளர்ந்து வந்த நிலையில், அவர் நிராகரித்த சில திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது தற்போது பேசு பொருளாகியுள்ளது.
அகில் அக்கினேனி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டான 'லெனின்' திரைப்படத்தில் முதலில் நடிகை இருந்தது ஶ்ரீலீலா தான். பின்னர் அந்த திரைப்படத்தில் நடிக்க அவர் மறுத்ததன் காரணமாக, அந்த வாய்ப்பு பாக்கியஸ்ரீ போர்ஸுக்கு சென்றது. தற்போது அந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், ஶ்ரீ லீலாவின் ரசிகர்கள் ஒரு நல்ல வாய்ப்பை அவர் தவற விட்டுள்ளதாக கவலை கொண்டுள்ளனர்.
இந்த ஒரு திரைப்படம் மட்டுமல்லாமல் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'கிங்டம் ’ திரைப்படம் , மற்றும் 'அனகனக ஒக்க ராஜு' உள்ளிட்ட பல திரைப்படங்களின் வாய்ப்புகளை அவர் கைநழுவ விட்டுள்ளார். இதனால் தெலுங்கு திரையுலகில் அவர் நடிக்கும் திரைப்படங்கள் குறைந்து போயுள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் அஜித் உடன் நடிக்கும் ஒரு வாய்ப்பையும் ஸ்ரீ லீலா தவற விட்டுள்ளார்.
தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த திரைப்படத்தில் ஶ்ரீலீலாவுக்கு பதில் கயாடு லோஹர் நடித்து வருகிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை அவர் தவற விட்டுள்ளார். பராசக்தி திரைப்படத்தின் மூலம் ஏற்கனவே தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமாகி இருந்தாலும், அந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரவேற்பை பெறாததால் அவரது கதாபாத்திரம் புகழ்பெறவில்லை.
ஸ்ரீலீலா வாய்ப்புகளை மறுப்பதற்கு பின் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அவர் நடிகை மட்டுமல்ல, மருத்துவக் கல்லூரியின் மாணவியும் கூட . நடிப்போடு சேர்ந்து படிப்பிலும் அவர் கவனம் செலுத்துகிறார். தற்போது தனது மருத்துவக் கல்லூரியின் படிப்பு இறுதி கட்டத்தில் இருப்பதால், அவர் அதற்கு அடுத்த கட்டமான 'இன்டென்ஷிப்' பணியைத் தொடங்க மும்முரமாக இருக்கிறார். அதனால் , சிறிது காலம் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியுள்ளார்.
ஸ்ரீ லீலா தனது மருத்துவ படிப்பில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். மற்ற படிப்புகளை போல் இல்லாமல் மருத்துவ படிப்பிற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதால், அதிக கவனமாக இருக்கிறார். அதே நேரம் திரையிலிருந்து விலகாமல், ஓய்வு நேரங்களில் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார், என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளது.