தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். அந்தவகை யில் 2015-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இறுதிச்சுற்று, தனிஒருவன், 36 வயதினிலே ஆகிய படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வாரிக்குவித்துள்ளன.
அதன்படி, 2015ஆண்டுக்கான சிறந்த படமாக மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘தனி ஒருவன்’ முதல் பரிசை தட்டிச் சென்றது. பசங்க-2 மற்றும் பிரபா ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இறுதிச் சுற்று படத்தில் நடித்த மாதவன் சிறந்த நடிகராகவும், 36 வயதினிலே படத்தில் நடித்த ஜோதிகா சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தனி ஒருவன் படத்தில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய அரவிந்த்சாமி சிறந்த வில்லனுக்கான விருதை தட்டிச் சென்றார்.
குத்துச் சண்டையை மையமாக வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இறுதிச் சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா சிறந்த இயக்குநராகவும், உத்தம வில்லன் மற்றும் பாபாநாசம் படங்களுக்காக ஜிப்ரானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. சிறந்த பின்னணி பாடகர் விருதை வை ராஜா வை படத்துக்காக கானா பாலாவும், சிறந்த பின்னணி பாடகி விருதை 36 வயதினிலே படத்திற்காக கல்பனா ராகவேந்திராவுக்கும் வழங்கப்படுகிறது.
2015 ஆண்டில் வெளியான படங்களில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிய 36 வயதினிலே, பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்திரிக்கும் படம் என்ற சிறப்பு பரிசு, சிறந்த நடிகை, சிறந்தப் பாடலாசிரியர் விவேக், சிறந்த பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர் என மொத்தம் 7 விருதுகளை வென்றுள்ளது.
மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்த தனி ஒருவன் மற்றும் இறுதிச் சுற்று தலா 6 விருதுகளை வென்றுள்ளன. தனி ஒருவன் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் ராம்ஜி, படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா, கதையாசிரியர் மோகன் ராஜா, சிறந்த நடன இயக்குநர் பிருந்தா என 6 விருதுகள் கிடைத்துள்ளன.
இறுதிச் சுற்று படத்திற்காக சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படத்துக்கான சிறப்பு பரிசு, நடிகைக்கான சிறப்புப் பரிசு ரித்திகா சிங் என மொத்தம் 6 விருதுகளை அள்ளியது.
2015ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, நாளை மாலை 6 மணியளவில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற உள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.