Actor Nani
Actor Nani

"தமிழ் ரசிகர்கள் எப்பவும் கெத்து தான்" - பாராட்டும் தெலுங்கு நடிகர்!

Published on

நானியின் நடிப்பில் சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், அன்பு காட்டுவதில் தமிழ் ரசிகர்கள் எப்போதுமே கெத்து தான் என படத்தின் நாயகன் நானி தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை இப்போது காண்போம்‌.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவரது நடிப்பில் 'சூர்யாவின் சனிக்கிழமை' என்ற திரைப்படம் பான் இந்தியா அளவில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது டிரெய்லரில் நன்றாகவே தெரிகிறது. இந்நிலையில், இப்படத்திற்கான புரோமோஷன் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தெலுங்கில் 'சரிபோதா சனிவாரம்' எனத் தலைப்பிடப்பட்ட இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே நானியை வைத்து 'அந்தே சுந்தரானிகி' என்ற தெலுங்கு படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 29 ஆம் தேதி சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வசூலை அதிகரிக்கும் விதமாக சென்னையில் புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

புரோமோஷன் நிகச்சியில் பேசிய நடிகர் நானி, “நான் தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களை பார்த்தும், ரசித்தும் வருகிறேன். இங்கு பாரதிராஜா, மணிரத்னம் மற்றும் சங்கர் போன்ற பல ஆளுமைகள் இருக்கின்றனர். ஒவ்வொரு முறை நான் தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் உங்களின் அன்பைக் கண்டு வியந்து போகிறேன். நான் நடித்த படங்களின் மீதான தமிழ் ரசிகர்களின் கருத்துகளை யூடியூபில் பார்த்து தெரிந்து கொள்வேன். நான் சென்னை விமான நிலையத்தை அடையும் போதெல்லாம் தமிழ் ரசிகர்கள் என்னிடம் வந்து நலம் விசாரிப்பதும், செல்ஃபி எடுத்துக் கெள்வதும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்பு காட்டுவதில் எப்போதுமே தமிழ் ரசிகர்கள் கெத்து தான். என் மீதான உங்கள் பாசத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படியுங்கள்:
ஓடிடி தளங்களின் பார்வை கன்னடத்தின் பக்கம் திரும்புமா?
Actor Nani
Surya's Saturday
Surya's Saturday

என்னுடைய சினிமா வாழ்க்கையில் சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம் மிகவும் ஸ்பெஷலான படம். வழக்கமான ஆக்ஷன் காட்சிகள் போல் இல்லாமல், எளிமையான ஆக்ஷனில் ரசிகர்களை கவரும் விதமாக இத்திரைப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் படியாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் ஹீரோ நான்தான் என்று பலரும் சொல்கின்றனர். ஆனால் நான் இரண்டாவது ஹீரோ தான். எஸ்ஜே சூர்யா தான் முதல் ஹீரோ. ஏனெனில் படத்தின் தலைப்பு கூட சூர்யாவுக்குத் தான் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. மேலும் அவர் திரையில் வரும் போது கிடைக்கும் உத்வேகம் மிகவும் அபரிமிதமானது. படப்பிடிப்புத் தளத்திலும் அவருடைய உற்சாகம் அனைவருக்கும் பரவி விடும். அந்த அளவிற்கு எளிமையான மற்றும் மகிழ்ச்சியான மனிதர் அவர்.” என்று நானி தெரிவித்துள்ளார்.

கடைசியாக நானியின் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் வசூலில் பட்டையைக் கிளப்பிய நிலையில், சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படமும் வெற்றியை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com