ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக இருந்தவர் நடிகர் மாதவன். இவரது படங்கள் பலவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தனது தனித்துவமான நடிப்பால், கோலிவுட்டில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார் மாதவன். இன்றைய காலகட்டத்தில் வசூலை அதிகரிக்க ஒவ்வொரு படத்தையும் அதிகளவில் விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஒரு நடிகருக்கு மட்டும் விளம்பரமே தேவையில்லை என்கிறார் மாதவன். யார் அந்த சூப்பர் ஹீரோ? வாங்க தெரிந்து கொள்ளலாம்.
இந்தியில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிறகு சினிமாவில் தடம் பதித்தவர் மாதவன். இவர் கடந்த 2000-இல் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து என்னவளே, மின்னலே, ரன், அன்பே சிவம் மற்றும் ஆய்த எழுத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்து வெற்றிகரமான நடிகராக வலம் வந்தார்.
"தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தின் படத்தை விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. படம் வெற்றி பெற அவரின் பெயரே போதும்" என மாதவன் சமீபத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கோலிவுட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் தல அஜித், தனது படங்களை எப்போதும் விளம்பரப்படுத்த நினைப்பதில்லை. படத்தில் நடித்து முடித்த பின், அப்படத்திற்கான புரோமோஷன் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் மாட்டார். மேலும், இவர் தொலைக்காட்சி சேனல்களில் நேர்காணல் கூட கொடுப்பதில்லை. இவரது படங்கள் அனைத்தும் அஜித்குமார் என்ற பெயரிலேயே அதிகளவில் பேசப்படுகின்றன. இதுபற்றிய புரிதல் மற்ற நடிகர்கள் எவருக்கும் இல்லை. தான் நடிக்கும் அனைத்துப் படங்களுக்கும் விளம்பரமே தேவைப்படாத சூப்பர் ஸ்டார் தல அஜித்குமார்” என மாதவன் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் அஜித்குமார் மட்டும் ஒரு தனி வழியைப் பின்பற்றி வருகிறார் என்பது முற்றிலும் உண்மை. நடிப்பு மட்டுமின்றி தனக்குப் பிடித்த கார் ரேஸிங்கிலும் கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்துகிறார். பொதுவாக பண்டிகை காலங்களில் புதுப் படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால், அஜித் படம் வெளியாகும் நாளே பண்டிகையாக மாறும் என்பது தமிழ் சினிமா அறிந்ததே. விளம்பரமே இல்லாமல் எப்படி அஜித்திற்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் இத்தனை வரவேற்பு கிடைக்கிறது என மற்ற நடிகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
ஆனால், இந்த வரவேற்பு திடீரென்று கிடைத்தது அல்ல. பல ஆண்டுகள் உழைப்புக்கு கிடைக்கும் வரவேற்பு. வெற்றிப் படங்களைக் காட்டிலும், அதிக தோல்விப் படங்களே இவருக்கு அமைந்தன. இருப்பினும் தனது ரசிகர்களால் தான், நான் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளேன் என அஜித் ஒருமுறை கூறியிருந்தார். ஒரு ஆண்டிற்கு குறைந்தபட்சம் 2 படங்களில் நடிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனங்களும், தியேட்டர் உரிமையாளர்களும் ஏற்கனவே அஜித்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் இது நடக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.