

மலையாள திரை உலகின் மிகச்சிறந்த சஸ்பென்ஸ் திரில்லர் தொடர்கதையாக திரிஷ்யம் திரைப்பட பாகங்கள் இருக்கின்றன.மலையாளத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற திரிஷ்யம் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. தமிழ் , தெலுங்கு , கன்னடம் , ஹிந்தி ஆகிய பிராந்திய மொழிகள் மட்டுமின்றி மாண்டரின் , சிங்களம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தத் திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
திரிஷ்யம் ஒரிஜினல் பாகத்தில் மோகன்லால் , மீனா , நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜித்து ஜோசப் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு திரிஷ்யம் படத்தின் முதல் பாகம் வெளிவந்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை விட, இதன் கதைக்களம் இந்தியா முழுக்க மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. இந்த கதையின் மறு பதிப்பில் நடிக்க பல்வேறு மொழிகளில் நடிகர்கள் போட்டி போட்டனர். தமிழில் பாபநாசம் ' என்ற பெயரில் இந்த திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகர் கமலஹாசன் நடித்திருந்தார். இதன் ஹிந்தி பதிப்பில் அஜய் தேவ்கனும் ஸ்ரேயா சரணும் நடித்திருந்தனர்.
இரு மகள்களுக்கு தந்தையான ஜார்ஜ் குட்டி என்னும் ஒரு கேபிள் டிவி ஆபரேட்டர் குடும்பம் , எதிர்பாராத சூழலில் கொலை வழக்கில் சிக்கி , காவல்துறையின் கண்காணிப்பில் வருகிறது. இதன் பின்னர் அவர்கள் காவல்துறையை எவ்வாறு? சமாளித்து கொலை வழக்கில் இருந்து தப்பித்தார்கள் என்பது தான் சுவாரசியமிக்க திரிஷ்யம் படத்தின் கதை. இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணம், இந்த கதையில் வரும் ஏராளமான சஸ்பென்ஸ்கள் தான். இந்தக் கதையில் வரும் திடீர் திருப்பங்கள் , டிவிஸ்ட்கள் அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 'திரிஷ்யம் 2' திரைப்படத்தை அதே நடிகர்களை வைத்து ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மகத்தான வெற்றியை பெற்று மலையாளத் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளது. முதல் இரு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 'திரிஷ்யம் -3 'வது பாகம் ,மே 21-ம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிசில் ₹100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை செய்தது.
இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பு இருந்தது. ஆனாலும் முந்தைய பாகங்களில் இருந்த சுவாரசியம் மூன்றாம் பாகத்தில் இல்லை, என்றும் ஒரு சிலர் விமர்சனம் செய்தனர். கதையின் சுவாரசியத்தை கூட்ட கொண்டுவரப்பட்ட சில புதிய திருப்பங்கள் சிலருக்குப் பிடித்திருந்தாலும், முதல் பாகத்தில் இருந்த த்ரில் உணர்வை இது தரவில்லை என்ற விமர்சனமும் இருந்தது. ஆனாலும் , மோகன்லாலின் ஆச்சர்யமிக்க நடிப்பும் அவரது திரைமொழியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
திரிஷ்யம்- 3 வெற்றிக்குப் பின்னர் ஊடகங்கள் இதன் 4-ம் பாகம் வருமா? என்று வினாக்களை எழுப்பி இருந்தனர். இதுகுறித்து இயக்குநர் ஜீத்து ஜோசப் பேசுகையில் , இந்த படத்தின் ஒவ்வொரு பாகத்திற்கான படப்பிடிப்பு நடத்தும் போதே , அடுத்த பாகத்தினை உருவாக்க தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தன்னிடம் தொடர்ந்து வலியுறுத்தியதை நினைவுகூர்ந்தார். தற்போது 4-ம் பாகத்திற்கான பணிகளைத் தொடங்குமாறு தயாரிப்பாளர் தன்னிடம் தொடர்ந்து வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த பாகத்திற்கான திட்டம் இருந்தாலும் அதை உடனடியாக, அவசரமாக எடுக்க தான் விரும்பவில்லை என்றும் ஜீத்து ஜோசப் தெளிவுபடுத்தியுள்ளார். திருஷ்யம் கதையின் நாயகனாக ஜார்ஜ்குட்டியும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களை வலுவான திரைக்கதையின் மூலம் சொல்வதே தனது விருப்பம் என்று ஜோசப் கூறியுள்ளார்.