
பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுதெலா மாடல், நடிகை, அழகு போட்டியாளர் என பன்முகம் கொண்டவர். மிஸ் யுனிவர்ஸ் இந்தியா, மிஸ் இந்தியா பட்டங்களை வென்ற இவர் 2013-ம் ஆண்டு ‘சிங் சாப் தி கிரேட்’ என்ற பாலிவுட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர் சரவணன் அருளுடன் இணைந்து தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஊர்வசி ரவுதெலா கலர்ஃபுல்லான உடை, கண்கவர் ஆபரணங்கள், வண்ணமயமான தலைப்பாகை அணிந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் சென்று ரசிப்பதற்காக லண்டன் சென்றார். இவர் மும்பையிலிருந்து துபாய் வழியாக லண்டனுக்கு எமிரேட்ஸில் சென்றார்.
இந்நிலையில் அங்குள்ள கேட்விக் விமான நிலையத்தில் உள்ள‘பேக்கேஜ் பெல்டி’ல் இருந்து ஊர்வசி ரவுதெலா உடைய சொகுசு சூட்கேஸ் திருடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இது தொடர்பாக எமிரேட்ஸ் விமான நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். அந்த சூட்கேஸில் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்ததாகக் கூறியுள்ள அவர், புகார் அளித்தும இதுவரை விமான நிறுவனத்தின் தரப்பில் எந்த உதவியும் வரவில்லை என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஊர்வசி ரவுதெலா, ‘பேக்கேஜ் பெல்ட்டில் இருந்து சூட்கேஸ் திருடப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக கூறியுள்ள அவ்ர், இது விமான நிலைய பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கும் செயல் என்றும் இது அனைத்து பயணிகளுக்குமான பாதுகாப்பு பற்றிய விஷயம்” என்றும் தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது பதிவில் கேட்விக் விமான நிலையம், எமிரேட்ஸ் மற்றும் பெருநகர காவல்துறையை டேக் செய்து, தனது போர்டிங் பாஸ், பேக்கேஜ் டேக் மற்றும் முதல் வகுப்பு டிக்கெட்டின் படங்களையும் இணைத்துள்ளார்.
ஊர்வசி ரவுதெலா தனது பதிவில் #platinumemiratesmember மற்றும் #gatwickairportpolice போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி அவசர உதவியை நாடினார்.
இந்த செய்தி அறிந்த பலரும் சமூகவலைதளத்தில் ஊர்வசி ரவுதெலாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில், ஊர்வசியின் புகாரைத் தொடர்ந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் இங்கிலாந்து காவல்துறையிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை என்பது குறிப்பித்தக்கது.
இதேபோல் 2023-ம் ஆண்டு, இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது, நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடிகை ஊர்வசி ரவுதெலா தனது 24 காரட் தங்க ஐபோனை தொலைத்தது குறிப்பிடத்தக்கது.