

ஒரு தலை ராகம் (1980), வசந்த அழைப்புகள் (1980), இரயில் பயணங்களில் (1981), நெஞ்சில் ஒரு ராகம் (1982), ராகம் தேடும் பல்லவி (1982) என ஐந்து படங்களை இயக்கி அவற்றில் நான்கு படங்களை மெகா ஹிட்டாக்கிய டி ராஜேந்தர் ஆறாவதாக இயக்கி, தயாரித்த படம் தான் உயிர் உள்ளவரை உஷா. இவர் சொந்தமாகத் தயாரித்த பட்டியலில் இது முதல் படம். உஷாவை திருமணம் செய்த பின் வெளியாகிய முதல் படமும் கூட. அதனால் தான் 43 வருடங்கள் கழித்து ரீ ரிலீஸ் ஆகும் டி ஆர் படங்களில் முதல் இடத்தை இது பிடிக்கிறது.
படத்தின் கதை :
நாயகன், நாயகி இருவரும், அம்மா, அப்பா இல்லாதவர்கள். இருவரும் ஒரே காலேஜில் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். இருவரது வீடுகளும் அருகருகே இருக்கிறது. நாயகன் அத்தை வீட்டில் வளர்கிறான். நாயகி அக்காவின் பராமரிப்பில் வளர்கிறாள், நாயகிக்கு ஒரு அண்ணனும் உண்டு.
காலேஜில் நாயகன், நாயகியை அடிக்கடி கிண்டல் பண்ணுவதும், கேலி பேசுவதுமாக இருக்கிறான். இது நாயகிக்குப்பிடிக்கவில்லை. நாயகனைக் கண்டாலே நாயகிக்கு வெறுப்பு. ஒரு சமயம் நாயகன், நாயகியை எல்லை மீறிப்பேச கோபம் ஆன நாயகி, நாயகன் எழுதிக்கொடுத்ததாக ஒரு பொய்யான லவ் லெட்டரை ரெடி பண்ணி காலேஜ் பிரின்சிபாலிடம் தருகிறாள். இதனால் நாயகனுக்கு காலேஜில் கெட்ட பெயர்.
காலேஜில் நடக்கும் ஒரு நாடகத்தில் நாயகனுக்கு துச்சாதனன் வேடம், நாயகிக்குப் பாஞ்சாலி வேடம். பொய்யான குற்றச்சாட்டு வைத்த நாயகியைப் பழி வாங்க நாயகன், நாயகியை முத்தம் இட்டு விடுகிறான்.
நாயகியின் அண்ணன் நாயகனை அடி வெளுத்து விடுகிறான். காயம்பட்ட நாயகனைப் பார்த்து நாயகிக்குக் காதல் வருகிறது.
நாயகியின் அண்ணன் தான் இவர்களது காதலுக்கும், திரைக்கதைக்கும் வில்லன். இவர்களது காதல் நிறைவேறியதா, இல்லையா? என்பதுதான் க்ளைமாக்ஸ்...
நாயகனாக கங்கா என்ற புதுமுக நடிகர் நடித்து இருக்கிறார். சில காட் சிகளில் கமல் சாயலில், பல காட் சிகளில் மோகன் சாயலில் நடிக்க முயற்சிக்கிறார்.
நாயகியாக புதுமுகம் நளினி, இந்தப் படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது 19. அடர்த்தியான கூந்தலும், காந்த விழிகளும் இவரது பிளஸ். நடனக்காட்சிகளில் நன்கு அபிநயம் பிடிக்கிறார். இவரது சிரிப்பு வசீகரிக்கிறது.
செயின் ஜெயபால் என்னும் கேரக்டரில் டி ராஜேந்தர் வருகிறார். காதலர்களை சேர்த்து வைக்கும் கேரக்டர். படம் முழுக்க இவருக்கு இரண்டே காஸ்ட்யூம்கள் தான்.. இவர் அடுக்கு மொழி வசனம் பேசி சண்டை போடும்போது சி சென்டர் ரசிகர்கள் கை தட்டுகிறார்கள்.
வில்லனாக ராதாரவி, காமெடி செய்யும்போது எம். ஆர். ராதா குரலிலு , வில்லத்தனம் செய்யும் பொது எம். ஆர். வாசு குரலிலும் பேசுகிறார்.
எஸ் எஸ் சந்திரன், கவுண்டமணி இருவரும் வில்லனுக்கு அல்லக்கைகளாக வருகிறார்கள், அதிக வாய்ப்பில்லை.
காலேஜ் புரொபஸராக வெண்ணிற ஆடை மூர்த்தி காமெடி செய்கிறார். இவர் எழுப்பும் விசித்திர ஒலிகளுக்கு என ஒரு ரசிகர் கூட்டமே உண்டு.
நாயகியின் அக்காவாக சரிதா குணச்சித்திர ரோல். வாழாவெட்டியாக இருக்கும் தன்னைப்பற்றி அடிக்கடி சுய இரங்கல் கவிதை வாசிப்பது கச்சிதம்.
நாயகனின் அத்தையாக காந்திமதி இயல்பான கிராமத்து நடிப்பு.
ராணிகாந்த், நாகை சோமன் இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள். நாயகியின் க்ளோஸ்-அப் ஷாட்களில் இவர்களது கை வண்ணம் தெரிகிறது.
தேவன் படத்தொகுப்பில் இரண்டே கால் மணி நேரம் படம் ஓடுகிறது.
பாடல்கள் எழுதி, இசையமைத்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருப்பவர் டி ராஜேந்தர்.
சபாஷ் டைரக்டர் :
* முதல் பாதி முழுக்க காலேஜ் கலாட்டா, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக படத்தைக் கொண்டு போன விதம்.
* புதுமுக நாயகியின் முக அழகு, சிரிப்பு வசீகரம்.
* செயின் ஜெயபால் தனது முன்கதையை சொல்லும்போது பறவைகளின் ஓவியங்களை வைத்தே காட்சிகளைத் தொகுத்தது.
* படம் ரிலீஸ் ஆகும் முன்பே மெகா ஹிட் ஆன 7 பாடல்களில் கொண்டாட்டமான பாடல்கள் நான்கை முதல் பாதியில், மெலோடி சாங்ஸ், சோகப்பாடல்களை பின்பாதியில் வைத்த சாமர்த்தியம்..
செம ஹிட் சாங்க்ஸ் :
* கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜூக்கு, காதலிப்போம் காதலிப்போம் மேரேஜூக்கு (ஓப்பனிங் சாங் )
* இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ? (ட்ரீம் டூயட் சாங்)
* மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க (ட்ரீம் டூயட் சாங் 2 )
* அடி என்னடி பந்தாடும் பாப்பாக்களே !(காலேஜ் கலாட்டா சாங் )
* இதயம் அதைக்கோவில் என்பேன் (லவ் ப்ரொபோஸ் சாங் )
* உன்னைத்தானே அழைத்தேன் உறங்காமல் தவித்தேன் (நாயகி கொண்டாட்ட சாங் )
* வைகைக்கரைக் காற்றே நில்லு, வஞ்சிதனைப்பார்த்தா சொல்லு (சோக சாங் )
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்...
* நாயகி பொய்யாக தயாரிக்கும் காதல் கடிதத்தில் வேறு ஒருவர் எழுதி இருக்க அதன் கீழே நாயகன் கையெழுத்து இருக்கிறது. ஆனால் வலுவில்லாத அந்தக்காரணத்தை வைத்து காலேஜை விட்டு டிஸ்மிஸ் செய்வது எப்படி?
* நாயகன் அடி வாங்கியதும் நாயகிக்கு உடனேயே காதல் வருவது நம்ப முடியவில்லை.
* முதன் முதலாக நாயகி காதலை வெளிப்படுத்திய அடுத்த கணமே நாயகனை இறுக அணைப்பதும் நம்ப முடியவில்லை.
* கிளைமாக்சில் செயின் ஜெயபால் கேரக்டர் காதலர்களை சேர்த்து வைக்க தன் உயிரைத் தருவது நம்ப முடியவில்லை. அதற்கான தேவையும் இல்லை.
- மெகா ஹிட்டான பாடல்களுக்காக படத்தை பார்க்கலாம். டிஜிட்டல் இசை சேர்த்து ஒரிஜினல் இசையின் இனிமை குறைந்து விட்டது.